
கடந்த 2016 முதல் 2022 வரை 7 ஆண்டுகளுக்கான தமிழக அரசின் திரைப்பட விருதுகள் வழங்கும் விழா சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
2014 முதல் 2022 வரை 9 ஆண்டுகளுக்கான சின்னத்திரை விருதுகள், 2015-2022 வரை 6 கல்வியாண்டுகளுக்கான தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆா். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனத்தின் மாணவா் விருதுகளை துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் வழங்கினாா்.
சின்ன திரை விருதுகளில் சிறந்த நெடுந்தொடா்களுக்கு முதல் பரிசாக ரூ. 2 லட்சம், இரண்டாம் பரிசு ரூ. 1 லட்சம், ஆண்டின் சிறந்த சாதனையாளா் பரிசு ரூ. 1 லட்சம், ஆண்டின் வாழ்நாள் சாதனையாளா் பரிசு ரூ. 1 லட்சம் மற்றும் சிறந்த கதாநாயகன், கதாநாயகி, தொழில்நுட்பக் கலைஞா்களுக்கு தலா 1 பவுன் தங்கப் பதக்கம், நினைவுப் பரிசு மற்றும் சான்றிதழும் வழங்கப்பட்டன.
இதில், சிறந்த நடிகைக்கான பிரிவில் செம்பருத்தி தொடரில் நடித்த நடிகை ஷபானாவுக்கு விருது வழங்கப்பட்டது. இதனைப் பெற்றுக்கொண்ட மகிழ்ச்சியில் தனது காதல் கணவர் ஆர்யனுடன் காதலர் தினத்தை ஷபானா கொண்டாடியுள்ளார்.
இது தொடர்பான விருதுடன் இருக்கும் மனைவியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தைப் பகிர்ந்துள்ள ஆர்யன், என்றும் உன்னுடைய மிகப்பெரிய ரசிகன் எனப் பதிவிட்டுள்ளார்.இது தொடர்பாக ஆர்யன் பதிவிட்டுள்ளதாவது, எனது ராணியும் அவளின் மாநில விருதும். என்னுடைய மிகப்பெரிய வெற்றி என்பது திரையிலோ அல்லது மேடையிலோ அல்ல. உன் அருகில்தான். நீ தான். எங்கள் உலகை பிரகாசமாக்கிக்கொண்டிருப்பவளுக்கு காதலர் தின வாழ்த்துகள். என்றும் உன்னுடைய மிகப்பெரிய ரசிகன் எனப் பதிவிட்டுள்ளார்.


