
கோவை: குடிசை மாற்று வாரியத்தில் வீடு ஒதுக்கீடு செய்து தருவதாகக் கூறி ஏமாற்றிய கோவை மாநகராட்சி கவுன்சிலர்மீது மாநகர காவல் ஆணையாளரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
கோவை சின்னியம்பாளையம் ஆசிரியர் காலனி பகுதியைச் சேர்ந்தவர்கள் பாலசுப்பிரமணியன்- லதா தம்பதியினர். இருவரும் கூலி வேலை செய்து வருகின்றனர்.
இவர்களுக்குச் சொந்த வீடு இல்லாததால், செல்வபுரம் குடுசைமாற்று வாரியத்தில் வீடு வேண்டித் தெற்கு வட்டாட்சியர் வருவாய் அலுவலகத்தில் தற்காலிக பணியாளராகப் பணிபுரியும் பூசாரிபாளையம் பகுதியைச் சேர்ந்த தம்பு (எ) திருமகன் என்பவரை அணுகியுள்ளனர். அப்போது அவர் இதற்காக 1,20,000 ரூபாய் கொடுக்க வேண்டும் எனவும், மாநகராட்சி 74ஆவது வார்டு கவுன்சிலர் சங்கர்(காங்கிரஸ்) மூலம் வீடு ஒதுக்கீடு செய்து பெற்றுத் தருவதாகத் தெரிவித்ததாகக் கூறியுள்ளார்.
இதனை நம்பி 2022ம் ஆண்டு பூசாரிபாளையத்தில் உள்ள கவுன்சிலர் அலுவலகத்தில் வைத்துத் திருமகன் முன்னிலையில் கவுன்சிலர் சங்கரிடம் 1,20,000 ரூபாய் கொடுத்துள்ளனர். அதனைத் தொடர்ந்து நீண்ட நாட்களாக வீடு ஒதுக்கீடு செய்து தராததால் கவுன்சிலர் சங்கரிடமும் திருமகனிடமும் கேட்ட பொழுதுக் கவுன்சிலர் சங்கர் அவரது லெட்டர் பேடில் சட்டமன்ற உறுப்பினராக உள்ள செல்வப்பெருந்தகைக்கு பணிந்துரை கடிதம் எழுதிய நகலையும் செல்வப்பெருந்தகை அமைச்சர் அன்பரசன் யிடம் வீடு கேட்டுப் பரிந்துரை செய்த நகலைக் கொடுத்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து வீடு கிடைக்கும் என்ற நம்பிக்கையிலிருந்து வந்த நிலையில் இன்றுவரை வீட்டையும் ஒதுக்கீடு செய்து தராமல் பணத்தையும் திருப்பிக் கொடுக்காமல் ஏமாற்றி வருவதுடன் தங்களை ஆள் வைத்து மிரட்டுவதாகக் கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் லதா புகார் அளித்துள்ளார்.
மேலும் தங்களை பணத்தை திரும்பப் பெற்று தருமாறும் தங்களையும் குடும்பத்தையும் மிரட்டுவதால் மிகுந்த அச்சமாக உள்ளதாகக் கண்ணீர் மல்கத் தெரிவித்தனர்.



