Advertisements

கரூர், வேலுச்சாமிபுரம் பகுதியில் கடந்த மாதம் 27ஆம் தேதி தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 நபர்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 20 லட்சம் ரூபாய் நிவாரணமாக வழங்கப்படும் என்று விஜய் அறிவித்திருந்தார். மேலும் இந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்து இருந்தார்.
இதன் தொடர்ச்சியாக, உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு நிவாரணத் தொகையாக 20 லட்சம் ரூபாய் அவரவர் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது. கரூர் சம்பவத்தை விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில், ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டது. மறுபுறம் சென்னை உயர்நீதிமன்றம் ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து உத்தரவிட்டது.
இதற்கு தவெக சார்ப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கட்டது. உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் மகேஸ்வரி மற்றும் அஞ்சாரியா ஆகியோர் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது கரூர் கூட்டநெரிசல் வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உச்சநீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.அத்துடன், இந்த விசாரணையை ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான 3 பேர் குழு கண்காணிக்குமென நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து கரூர் வந்த சிபிஐ அதிகாரிகள் வேலுசாமிபுரத்தில் விசாரணையை தொடங்கி நடத்தி வருகின்றனர். இதற்கிடையே, கரூரில் பாதிக்கப்பட்ட மக்களை இன்று வரை தவெக சந்திக்கவில்லை என்று அரசியல் கட்சிகள் குற்றம் சாட்டி வந்தனர். இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன், பாதிக்கப்பட்ட மக்களை வீடியோகாலில் பேசினார் விஜய். அப்போது அவர்களிடம் காவல்துறை அனுமதி அளித்ததும் விரைவில் உங்களை சந்திக்க வருகிறேன் என்று தெரிவித்து இருந்த தாக கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து விஜய் கரூர் செல்ல சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது. ஆனால் இன்று வரை காவல்துறை தரப்பில் எந்தவித அனுமதியும் வழங்கப்படவில்லை . இந்த சூழலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சென்னைக்கு அழைத்து ஆறுதல் கூறுவதாக விஜய் தரப்பிலிருந்து தகவல் வெளியாகியுள்ளது. இன்று கரூரில் இருந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சென்னைக்கு, நிர்வாகிகள் வாகனத்தில் அழைத்து செல்லும் பணி தொடங்கியது. அவர்களை கார் மூலமாக சென்று பேருந்தில் அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் தவெக தலைவர் விஜய்யுடனான சந்திப்புக்கு கரூரில் இருந்து கட்சி நிர்வாகிகள் வாகனம் மூலம் புறப்பட்டு இன்று இரவுக்குள் சென்னைக்கு அழைத்து வர வேண்டுமென தவெக தலைமை நிர்வாகிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. கரூரில் இருந்து உயிரிழந்தவர்கள் உறவினர்களை பேருந்துகள் மூலம் அழைத்துச் செல்லும் இடத்தை ரகசியமாக வைத்திருக்கவும், நிர்வாகிகளுக்கு கட்சித் தலைமை கடுமையான கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் கரூர் அருகே வெண்ணைமலை பகுதியில் இருந்து பேருந்து மூலம் அழைத்து சென்று வருகின்றனர்.
குறிப்பாக உடல்நிலை சரியின்மை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் ஒரு சிலர் விஜயை சந்திக்க சென்னைக்கு செல்லவில்லை என தகவல் வெளியாகவில்லை. இதனிடையே நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் செத்துப்போன குடும்பத்தினர் அனைவரையும் பனையூருக்கு வா என்று சொல்கிறார். அப்படி என்றால் தேர்தல் நேரத்தில் அனைத்து ஓட்டு பெட்டிகளையும் பனையூரில் வை என்று சொல்வாரா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
பண்ணையார் கூட பஞ்சாயத்துக்கு வருவார். ஆனால் பனையூர் பஞ்சாயத்து என் வீட்டில் தான்.. ஆலமரத்துக்கு வரமாட்டேனு இருக்கிறார். வீட்டில் தான் பஞ்சாயத்து.. என்கிறார் என்றால் நாட்டாமையை தாண்டிய நாட்டாமையாக இருக்கிறது” என தவெக தலைவர் விஜயின் செயல்பாடு என கடுமையாக விமர்சனம் செய்துள்ளார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.
விஜயின் இந்த செயலும் விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது. உறவுகளை இழந்து நிற்கும் குடும்பத்தினரை நேரில் சென்று சந்திக்க முடியாத நிலையில் விஜய் இருக்கிறார். இவர் எப்படி ஓட்டு கேட்டு வெளியே வருவார்? வெற்றி பெற்றால் எப்படி மக்களை சந்திப்பார்? என்று பலரும் பலவிதமாக கேள்வி எழுப்பி வருகின்றனர். அதுமட்டுமின்றி பனையூர் பண்ணையார்.. இறங்கி வரவேமாட்டார் என்றும் சிலர் விமர்சித்து வருகின்றனர்.
இதற்கிடையே தான் நேற்று பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழாவையொட்டி சென்னையில் அவரது புகழுரை பொதுக்கூட்டம் நாம் தமிழர் கட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்த கூட்டத்தில் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசினார். அப்போது தவெக தலைவர் விஜயை, சீமான் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
Advertisements



