
நடிகை சாய்பல்லவி விளம்பர படத்தில் நடிக்கும் வாய்ப்பை நிராகரித்ததாகத் தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை:நடிகர் நடிகைகள் சினிமாவை தாண்டி விளம்பர படங்களில் நடித்தும் சம்பாதித்து வருகிறார்கள். இவர்களில் சிலர் மக்களின் நலனுக்குக் கேடு செய்யும் விளம்பரங்களில் நடிப்பதாகச் சர்ச்சைகளும் கிளம்பின.
இந்த நிலையில் பிரபல நடிகை சாய்பல்லவி விளம்பர படத்தில் நடிக்கும் வாய்ப்பை நிராகரித்ததாகத் தகவல் வெளியாகி உள்ளது.
சமீபத்தில் அழகு சாதன பொருட்கள் தயாரிக்கும் விளம்பர நிறுவனமொன்று சாய்பல்லவியிடம் தங்கள் பொருட்களை விளம்பரம் செய்யும் படத்தில் நடிக்குமாறு கேட்டுள்ளது. அதற்கு ரூ.2 கோடி சம்பளம் தருவதாகவும் தெரிவித்தது.
ஆனால் அந்த விளம்பர படத்தில் நடிக்க முடியாது என்று சாய்பல்லவி மறுத்துவிட்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது. சாய்பல்லவி டாக்டருக்குப் படித்தவர். அதோடு முகத்தில் மேக்கப் போடுவதும் அவருக்குப் பிடிக்காது. சினிமாவிலும் மேக்கப் இல்லாமலேயே நடிக்க விரும்புவார்.
அழகு சாதன பொருட்களில் இருக்கும் தீமைகளை உணர்ந்து அவர் நடிக்க மறுத்ததாகக் கூறப்படுகிறது. ரூ.2 கோடி கொடுத்தும் விளம்பரத்தில் நடிக்க மறுத்த சாய்பல்லவி செயலுக்கு வலைத்தளத்தில் ரசிகர்கள் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.



