S.V.Sekar : தமிழ்நாட்டில் திமுக vsஅதிமுக மட்டும்தான் – எஸ்.வி. சேகர்

தமிழ்நாடு அரசியல் களம் குறித்து பிரபல நடிகர் எஸ்.வி. சேகர் இன்று பல்வேறு கருத்துகளை செய்தியாளர்கள் சந்திப்பின் போது பகிர்ந்துகொண்டார். அப்போது அவர்,”2026 சட்டமன்ற தேர்தல் மிகக் கடுமையாக இருக்கும். திமுக கொண்டு வந்துள்ள பெண்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் கொடுக்கும் திட்டம் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தும், கிட்டத்தட்ட ஒன்றரை கோடி ஓட்டுகள் அவர்களுக்கு உள்ளது.

விஜய் வந்திருக்கிறார், அவருக்கு மிகப்பெரிய கூட்டம் வந்துள்ளது. அந்த கூட்டத்தை வாக்குகளாக மாற்ற வேண்டிய பொறுப்பு விஜய்க்கு உள்ளது. காமராஜர் மெரினாவில் கூட்டம் நடத்தியபோது ஒரு லட்சம் பேர் கூடினர். ஆனால் அந்த தேர்தலில்தான் காமராஜர் ஒரு கல்லூரி மாணவரிடம் தோல்வியடைந்தார். கூட்டத்திற்கும் வாக்குக்கும் சம்பந்தமில்லை. தமிழ்நாட்டில் தேர்தல் என்றால் திமுக vsஅதிமுக மட்டும்தான், மற்றவர்கள் யாரும் இல்லை.தாக்கம் என்பது வேறு ஆட்சி பிடிப்பது என்பதாகும். விஜய்க்கு இன்னும் வயது இருக்கிறது. ஸ்டாலின் இப்போது முதலமைச்சராக இருக்கிறார் என்றால் மூன்று முறை தமிழக முழுவதும் சுற்றி வந்திருக்கிறார்.

தமிழக பாஜகவில் ஒரு பிராமணர்கள் கூட இல்லாத நிலையை, அண்ணாமலை கொண்டு வந்துள்ளார். நான் தற்போது பாரதிய ஜனதா கட்சியில் இல்லை, அவர் பிரதமர் என்பதால் மோடி அவரின் புகைப்படங்களை என் வீட்டில் இருக்கிறது, வீட்டில் வந்து பாருங்கள் ஜெயலலிதா, கலைஞர் புகைப்படங்களும்தான் அங்கு இருக்கிறது. அண்ணாமலை போன்று அரசியல் செய்தால் நாற்பதற்கு பூஜ்ஜியம்தான் எடுக்க முடியும், அண்ணாமலை அரசியலுக்கு தகுதி இல்லாதவர். அவர் ஒழுங்காக படிக்கவில்லை என்றுதான் அங்கிருந்து வந்தார், இங்கும் சரியாக இல்லை என்றுதான் வெளிநாட்டுக்குப் படிக்க சென்று இருக்கிறார். தமிழகத்தில் ஒரு பிராமணர் கூட இல்லாமல் அனைவரையும் ஒழித்து கட்டி விட்டார்” என குற்றஞ்சாட்டினார்.

தமிழகத்தைப் பொறுத்தவரை அரசியல் போட்டி என்பது அதிமுக மற்றும் திமுகவிற்கு தான். மற்ற கட்சிகள் எல்லாம் ஓரமாக நின்று தனியாக விளையாடிக் கொண்டிருக்கலாம். விஜய்யின் வயதிற்கு இன்னும் 6,7 தேர்தல்களை சந்திக்கலாம். 2010 ஆண்டில் அப்போதைய முதலமைச்சர் கருணாநிதியிடம் பிராமணர்களுக்கு இட ஒதுக்கீடு 10 சதவீதம் கொடுக்க வேண்டும் என்று கேட்டவன்.
தமிழகத்தில் 234 சட்டமன்ற தொகுதி இருக்கிறது. இதில் 7 பேராவது பிராமணர்கள் எம்எல்ஏக்களாக இருக்க வேண்டும். இதை திமுக அறிவித்தால் திமுகவுக்காக தேர்தலில் பிரச்சாரம் செய்வேன். எந்த கட்சி அறிவித்தாலும் அந்த கட்சிக்காக பிரச்சாரம் செய்வேன்.பிராமணர் சமூகத்தை யாரும் வாக்கு வங்கியாக பார்க்கவில்லை. சமுதாயத்தில் இணக்கமாக வாழ்வது எப்படி என்று சொல்லிக் கொடுக்க வேண்டும். அதை விட்டுவிட்டு அய்யய்யோ அசைவம் அசைவம் என்று சொல்லக்கூடாது.

அவரவருக்கு பிடித்ததை அவரவர் சாப்பிட வேண்டும். தெலுங்கர்கள் குறித்து நடிகை கஸ்தூரி பேசியது கண்டிக்கத்தக்கது. எதிர்காலத்தில் குஷ்பு மாதிரி வந்துவிடலாம் என்ற எண்ணத்தில் கஸ்தூரி பேசியிருக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *