
2000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கான காலக்கெடு செப்டம்பர் 30ஆம் தேதியுடன் முடிவடைகிறது.
மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சி அமைந்த பிறகு கடந்த 2016ம் ஆண்டு நாடு முழுவதும் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அதிரடியாக அறிவித்தார். ஒட்டுமொத்த நாட்டையே அதிர வைத்த அந்த அறிவிப்புக்குப் பிறகு, புதிய 500 ரூபாய் நோட்டுகளையும், புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளையும் ரிசர்வ் வங்கி அறிமுகம் செய்தது.
இந்த நிலையில், கடந்த மே மாதம் 19-ஆம் தேதி ரிசர்வ் வங்கி திடீரெனச் செப்டம்பர் மாதம் 30-ஆம் தேதிக்குப் பிறகு புழக்கத்தில் உள்ள ரூபாய் 2 ஆயிரம் நோட்டுகள் செல்லாது என்றும், வங்கியில் ஒப்படைக்குமாறும் அறிவிப்பை வெளியிட்டது. 2019-ஆம் ஆண்டில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பதை பெருவாரியாக மத்திய அரசு நிறுத்திவிட்டதாலும், 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளின் புழக்கம் பெருமளவில் குறைந்துவிட்டது. கடந்த ஆகஸ்ட் 31-ந் தேதி நிலவரப்படி, இதுவரை 3.32 லட்சம் கோடி மதிப்பிலான ரூபாய் 2 ஆயிரம் நோட்டுகள் புழக்கத்திலிருந்து திரும்பப் பெறப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ள வேண்டும். மாற்றாவிட்டால் 2000 ரூபாய் நோட்கள் அதன்பிறகு செல்லாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், எந்த வணிக கடைகளிலும் எந்த ஒரு பொருட்களையும் 2000 ரூபாய் நோட்கள் கொடுத்து மாற்றிக் கொள்ள முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.2000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கான காலக்கெடு செப்டம்பர் 30ஆம் தேதியுடன் முடிவடைகிறது.


