
தாம் சொன்ன வார்த்தையை விராட் கோலி பைனலில் காப்பாற்றியதாகப் பாண்டிங் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் பேசியது பின்வருமாறு:- “முதலில் விராட் கோலி இந்திய அணியில் இருக்க வேண்டுமா? என்ற பேச்சுக்கள் காணப்பட்டன. பின்னர் தொடர் நடைபெறும்போது அவர் ரன்கள் அடிக்கவில்லை. அப்போது குறைந்தது 10 முறை அவருடைய பார்ம் பற்றி என்னிடம் கேட்டிருப்பார்கள். அப்போதெல்லாம் அவரை விடுங்கள். பெரிய தருணம் வரும்போது கண்டிப்பாக அவர் உயர்ந்து நின்று அசத்துவார் என்று சொன்னேன். அப்படி நான் சொன்னதை அவர் இறுதிப்போட்டியில் செய்து காட்டியுள்ளார். குறிப்பாக ஆரம்பத்திலேயே 3 விக்கெட்டுகள் இழந்த இந்தியா அழுத்தத்திற்குள் தள்ளப்பட்டபோது விராட் கோலி சிறப்பாக விளையாடினார்.
அது அவரால் போட்டியை எந்தளவுக்கு புரிந்து வைத்துத் தன்னுடைய அணிக்காக வெற்றியைப் பெற்றுக் கொடுக்கும் ஆட்டத்தை விளையாட முடியும் என்பதை காட்டியது. ஆனால் அது அவருக்கு எளிதாக இல்லை. அன்றைய நாளில் அவர் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தன்னுடைய மெதுவான அரை சதத்தை அடித்தார். அப்படி கடினமாக வேலை செய்த அவர் 50 ரன்கள் கடந்ததும் வேகமாக ரன்கள் அடித்தார். அது தான் அவரிடமிருந்து அணிக்குத் தேவைப்பட்டது. தனது கெரியர் முழுவதும் அவர் இப்படி சூழ்நிலைகளைப் படித்து அதற்குத் தகுந்தாற்போல் விளையாடி அசத்தி வருகிறார்” என்று கூறினார்.


