Thoppur Accident: தொப்பூர் விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கும் நிவாரணம்!

Advertisements

தருமபுரி மாவட்டம் தொப்பூர், சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை, விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் நேற்று நேரிட்ட வெவ்வேறு விபத்துகளில் 9 பேர் உயிரிழந்தனர்.

கர்நாடகா மாநிலத்தில் இருந்து நெல் பாரம் ஏற்றிய லாரி நேற்று மாலை தருமபுரியைக் கடந்து தொப்பூர் கணவாய் தேசிய நெடுஞ்சாலை வழியாக சேலம் நோக்கிச் சென்று கொண்டிருந்தது. தொப்பூர் கணவாய் இரட்டைப் பாலத்தில் சென்றபோது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, முன்னால் சென்ற பார்சல் சர்வீஸ் லாரி மீது மோதியது.

பார்சல் சர்வீஸ் லாரி, அதற்கு முன்னால் பட்டி மாவு பாரத்துடன் சென்ற லாரி மீது மோதியது. இதில் பட்டி மாவு ஏற்றிச் சென்ற லாரி பாலத்தின் கீழே கவிழ்ந்தது.

இதற்கிடையில், நெல் பாரம் ஏற்றிச் சென்ற லாரி 2 கார்கள் மீது மோதியது. இதில் ஒரு கார், அந்த லாரியின் கீழே சிக்கிக்கொண்டது. அப்போது லாரியில் தீப்பற்றியதால், லாரி மற்றும் கார் ஆகியவை எரியத் தொடங்கின.

தீயணைப்புத் துறையினர் நீண்டநேரம்போராடி தீயை அணைத்த நிலையில், காயங்களுடன் உயிருக்குப் போராடிய 4 பேரை மீட்டு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர். அவர்களில் கோவையை சேர்ந்த ஜெனிபர் என்பவர் வழியிலேயே உயிரிழந்தார். மற்ற3 பேரில் இருவர் சேலத்திலும், வினோத்குமார்(32) தருமபுரி அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுதவிர, சம்பவ இடத்திலேயே தீயில் கருகிய நிலையில் 3 பேர் சடலமாக மீட்கப்பட்டனர். மேலும், இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

3 பேர் உயிரிழப்பு: ராமநாதபுரம் மாவட்டம் அழகன்குளத்தைச் சேர்ந்த சிலர் தைப்பூசத்தை முன்னிட்டு பழநி கோயிலுக்குச் சென்றுவிட்டு, சரக்கு வாகனத்தில் ஊருக்குப் புறப்பட்டனர். நேற்று அதிகாலை சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே தளக்காவயல் பகுதியில் சென்றபோது, அவ்வழியே வந்த லாரி மீது சரக்கு வாகனம் மோதியது.

இதில் சரக்கு வாகனத்தில் வந்த அழகன்குளம் நம்புராஜன்(60), அவரது மனைவி காளியம்மாள்(55), வாகன ஓட்டுநர் முகமது(38) ஆகியோர் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், வினித்(22), முருகேசன்(63), மாதவன் (36), ஆறுமுகம் (45) உட்பட 5 பேர்காயமடைந்து, சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். விபத்து குறித்து தேவகோட்டை தாலுகா போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

முதல்வர் இரங்கல்: இது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல். அவர்களது குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம், பலத்த காயமடைந்தவர்களுக்கு தலாரூ.1 லட்சம் முதல்வரின் நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன்” என்றுதெரிவித்துள்ளார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *