
நடிகை ரகுல் ப்ரீத் சிங் மும்பையில் தன்னுடைய ரசிகர்களுடன் சேர்ந்து கேக் வெட்டித் தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடி உள்ள புகைப்படங்கள் வைரலாகிறது.
தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் நடித்துப் பான் இந்தியா நடிகையாக வலம் வருபவர் ரகுல் ப்ரீத் சிங். இவர் கடந்த 2009-ம் ஆண்டு கன்னடத்தில் வெளியான கில்லி என்கிற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். இதையடுத்து 2011-ம் ஆண்டு தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் ஹீரோயினாக அறிமுகமானார் ரகுல் ப்ரீத் சிங். தமிழில் இவர் முதன்முதலில் நடித்த திரைப்படம் யுவன். இதன்பின்னர் மகிழ் திருமேனி இயக்கிய தடையறத் தாக்கப் படத்தில் நடித்ததன் மூலம் கோலிவுட்டில் கவனம் பெற்றார்.

பின்னர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய ஸ்பைடர், எச்.வினோத் இயக்கிய தீரண் அதிகாரம் ஒன்று, சூர்யா ஜோடியாக என்.ஜி.கேயென வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களாகத் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் ரகுல் ப்ரீத் சிங்.

தமிழில் நடிகை ரகுல் ப்ரீத் சிங் கைவசம் இந்தியன் 2 மற்றும் அயலானென இரண்டு பிரம்மாண்ட படங்கள் உள்ளன. இதில் இந்தியன் 2 படத்தை ஷங்கர் இயக்கி வருகிறார். கமல்ஹாசன் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் ரகுல் ப்ரீத் சிங் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

அதேபோல் அயலான் படத்தை இன்று நேற்று நாளைப் படத்தின் இயக்குனர் ரவிக்குமார் இயக்கி உள்ளார். இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்துள்ளார் ரகுல் ப்ரீத் சிங், இப்படம் வருகிற 2024-ம் ஆண்டு ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் ஆக உள்ளது.
இந்நிலையில், நடிகை ரகுல் ப்ரீத் சிங் தனது 33-வது பிறந்தநாளை இன்று கொண்டாடி வருகிறார். அவருக்குச் சமூக வலைதளங்கள் வாயிலாக ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.

இதனிடையே நடிகை ரகுல் ப்ரீத் சிங் தன்னுடைய பிறந்தநாளை ரசிகர்களுடன் கேக் வெட்டிக் கொண்டாடி உள்ளார். மும்பையில் தனக்காகக் கேக்குடன் காத்திருந்த ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் அவர்களுடன் இணைந்து தன் பிறந்தநாளை கொண்டாடி உள்ளார். இதைப்பார்த்த நெட்டிசன்கள் இந்தக் காலத்துல இப்படியொரு ஹீரோயினா என ஆச்சர்யத்துடன அவரைப் பாராட்டி வருகின்றனர்.

