
கன்னியாகுமரி:
திருவள்ளுவர் சிலைக்கும்… விவேகானந்தர் சிலைக்கும் இடையே அமைக்கப்பட்ட கண்ணாடி பாலம் திறப்பு விழா நிகழ்ச்சியைப் நடிகர் ரஜினிகாந்த் புறக்கணித்த சம்பவம் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.
மக்கள் நலத் திட்டங்களைத் துவக்கி வைப்பதற்காகத் தென் மாவட்டங்களில் அரசு முறை பயணம் மேற்கொண்ட முதல்வர் ஸ்டாலின், இன்று மதியம் சென்னை திரும்புகிறார். இந்தப் பயணத்தில், அய்யன் திருவள்ளுவருக்கு குமரியில் சிலை அமைக்கப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவு பெறும் வெள்ளி விழா நிகழ்வைக் கொண்டாடும் வகையில், திருவள்ளுவர் சிலைக்கும் விவேகானந்தர் பாறைக்கும் இடையே கண்ணாடி இழை பாலத்தைத் திறந்து வைக்கும் நிகழ்வு மிக முக்கியமானது.
உணர்வுபூர்வமான இந்த நிகழ்வில் கண்ணாடி இழை பாலத்தைத் திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின். இந்த நெகிழ்ச்சியான விழாவில் தமிழக அமைச்சர்கள், எம்.பிக்கள், எம்.எல்.ஏ.க்கள், அரசு அதிகாரிகள், வி.ஐ.பி.க்கள் பலரும் கலந்து கொண்டனர்.
ஸ்டாலின் போஸ்ட்:
முதல்வர் ஸ்டாலினும் இதைப் பற்றி, பாறையுடன் இணைக்கக் கடல் நடுவே அமைக்கப்பட்டுள்ள கண்ணாடி இழைப் பாலம் திறப்பு, பல்வேறு வகைகளிலும் குறள்நெறி பரப்பும் தகைமையாளர்களுக்குச் சிறப்பு, அறிவார்ந்தோரின் கருத்துச் செறிவுமிக்க பேச்சில் வள்ளுவத்தின் பயன்குறித்த பட்டிமன்றம் – என “வள்ளுவம் போற்றுதும்” முதல் நாள் நிகழ்வுகள் நடந்தேறின! வள்ளுவத்தை விதைப்போம்! வையத்தில் உயர்ந்து நிற்போம்!, என்று போஸ்ட் செய்துள்ளார்.
ரஜினிகாந்த் திருவள்ளுவர் சிலை அழைப்பு:
இதனையடுத்து, ரஜினியிடம் அரசு தரப்பில் பேச, அவரும் ஓ.கே. தெரிவித்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து, விழாவிற்காகச் சென்னையிலிருந்து அமைச்சர்கள் பலருக்கும் ப்ளைட் டிக்கெட் புக் பண்ணிய அரசு அதிகாரிகள், ரஜினிக்கும் அவரது மகள் ஐஸ்வர்யாவிற்கும் என 2 டிக்கெட்டுகள் பதிவு செய்தனர். அந்த டிக்கெட்டுகள் ரஜினிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த நிலையில், விழாவில் கலந்து கொள்வதற்காகச் சென்னையிலிருந்து அமைச்சர்கள் நேற்று ப்ளைட் ஏறினார்கள். அவர்கள் பயணிக்கும் விமாணத்தில் ரஜினிக்கும் அவரது மகளுக்கும் டிக்கெட் போடப்பட்டிருப்பதை அறிந்திருந்த அமைச்சர்கள், ரஜினியின் வருகையை எதிர்பார்த்தனர்.
ஆனால், விமானம் புறப்படும் நேரம்வரை ஏர்போர்ட்டுக்கு ரஜினி வரவில்லை. அவரது மகளும் வரவில்லை. இதனால், ஏன் வரவில்லை? என்கிற குழப்பத்திலேயே இருந்திருக்கிறார்கள் அமைச்சர்கள். இதற்கிடையே, ‘கடைசி நேரத்தில் தவிர்க்க இயலாத காரணத்தால் வர முடியவில்லை’ என ரஜினி சொன்ன தகவலை முதல்வர் ஸ்டாலினுக்குத் தெரியப்படுத்தப்பட்டதாம். அவரும், ஓ.கே. என இயல்பாகச் சொல்லிவிட்டாராம்.
திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டு 25-ஆம் ஆண்டின் வெள்ளி விழா நிகழ்வில் ரஜினிகாந்த் இருக்க வேண்டும் என முதல்வர் தரப்பில் விரும்பப்பட்டு, ரஜினியும் வருவதாகக் கூறிய நிலையில்தான் டிக்கெட்டே புக் பண்ணப்பட்டது. அப்படியிருந்தும் அவர் வரவில்லை என்பதில் அரசு தரப்பு அப்-செட் தான் என்கிறார்கள் விபரமறிந்தவர்கள். கடைசி நேரத்தில் அவர் பயணத்தைத் தவிர்த்திருப்பது, ‘விழாவை ரஜினி புறக்கணித்து விட்டார்’ என்கிற ரீதியல் அரசு தரப்பில் பரவியது.
ரஜினியின் இந்தப் புறக்கணிப்புக்கு நிஜ காரணம் என்னவென்பது தெரியவில்லை. திருவள்ளுவர் சிலை தொடர்பாக, சில சென்டிமெண்ட் விவகாரம் அவருக்குச் சொல்லப்பட்டதால் புறக்கணிப்பு முடிவை எடுத்திருக்கலாம், இவரது பயணத்தைக் கேள்விப்பட்டு பாஜக தரப்பில் போக வேண்டாமெனச் சொல்லியிருக்கலாமென வெவ்வேறு காரணங்கள் சொல்லப்படுகின்றன.

