
தமிழ்நாட்டு இரயில்வே திட்டங்களுக்குத் தேவையான நிதியைத் தாமதமின்றி முழுமையாக விடுவிக்கவும், நிறுத்தி வைக்கப்பட்டுள்ள திட்டங்களை மீண்டும் தொடங்கிடவும் இரயில்வே அமைச்சகத்துக்குப் பிரதமர் மோடி அறிவுறுத்த வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
அந்தக் கடிதத்தில், தமிழ்நாட்டில் ரயில்வே திட்டங்களைச் செயல்படுத்த 2500 எக்டேர் நிலங்கள் கையகப்படுத்த நிர்வாக ஒப்புதல் வழங்கியுள்ளதாகவும், இதில் 931 எக்டேருக்கு ரயில்வே துறை நிதி ஒதுக்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். 19 திட்டங்களுக்கு 1273 எக்டேர் நிலங்கள் தேவைப்படும் நிலையில் அதில் 1198 எக்டேர் நிலங்களைக் கையகப்படுத்தி ரயில்வே துறையிடம் ஒப்படைத்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
ஐந்து திட்டங்களுக்கு நிலத் திட்ட அட்டவணை இன்னும் வழங்கவில்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
திண்டிவனம் – நகரி இடையே ரயில் பாதை அமைக்கவும், மதுரை – தூத்துக்குடி இடையே அருப்புக்கோட்டை வழியாக ரயில் பாதை அமைக்கவும், சின்னசேலம் – கள்ளக்குறிச்சி இடையே ரயில்பாதை அமைக்கவும் நிலம் கையகப்படுத்தும் பணிகள் முழுமையாக முடிவடைந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
நில எடுப்பையும் இழப்பீடு வழங்குவதையும் விரைவுபடுத்த ஏதுவாக அனுமதிக்கப்பட்ட திட்டங்களுக்குத் தேவையான நிதியைத் தாமதமின்றி முழுமையாக முன்னுரிமை அடிப்படையில் விடுவிக்க வலியுறுத்தியுள்ளார். மதுரையில் இருந்து அருப்புக்கோட்டை வழியாகத் தூத்துக்குடிக்கும், திண்டிவனம் – திருவண்ணாமலை இடையேயும் ரயில் பாதை அமைக்கும் திட்டங்களை மீண்டும் தொடங்கவும் அதற்குத் தேவையான நிதியை வழங்கவும் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக ரயில்வே அமைச்சகத்துக்கு உரிய அறிவுரைகளை வழங்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதிய கடிதத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.



