
பூஞ்ச்: ” காஷ்மீர் மக்களின் பிரச்னைகள்குறித்து பார்லிமென்டில் குரல் எழுப்பத் தயாராக உள்ளேன். இதற்கு உங்களின் அறிவுறுத்தல் மட்டும் போதும்,” என எதிர்க்கட்சி தலைவர் ராகுல் பேசினார்.
காஷ்மீரின் இரண்டாம் கட்ட தேர்தலை முன்னிட்டு பூஞ்ச் மாவட்டத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் ராகுல் பேசியதாவது: பா.ஜ., வும், ஆர்.எஸ்.எஸ்., அமைப்பினரும் எங்குச் சென்றாலும் ஜாதி, மதம் மாநிலம், மொழியெனப் பிரிவினை ஏற்படுத்திக் குழப்பம் ஏற்படுத்த முயற்சி செய்கிறது. வெறுப்பை அன்பால் தான் வெல்ல முடியும். ஒரு பக்கம் வெறுப்பை பரப்புபவர்களும், மறுபக்கம் அன்பை பரப்புபவர்களும் உள்ளனர். அனைவரையும் ஒருங்கிணைத்தும், அவர்களின் உரிமையைக் கொடுத்தும் காங்கிரஸ் முன்னேற்றும்
மக்களின் விருப்பம் மற்றும் செய்ய வேண்டிய பணிகுறித்த பிரச்னைகளைப் பார்லிமென்டில் எழுப்பத் தயாராக உள்ளேன்.
அதற்கு மக்கள் எனக்கு அறிவுறுத்தினால் போதும். லோக்சபா தேர்தலுக்குப் பிறகு எதிர்க்கட்சிகள் வலிமையாகி உள்ளன. பிரதமர் மோடி நம்பிக்கையை இழந்துவிட்டார். அது அவரின் முகத்தில் தெரிகிறது. முன்பு இருந்தது போல் அவர் இல்லை. இவ்வாறு ராகுல் பேசினார்.


