
புதுடில்லி: ‘ஹரியானா சட்டசபை தேர்தல் முடிவுகள் தொடர்பாகப் புகார்கள் வந்துள்ளன. இதுகுறித்து தேர்தல் கமிஷனிடம் புகார் அளிக்க உள்ளேன்’ எனக் காங்கிரஸ் எம்.பி.,யும், எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் தெரிவித்தார்.
இதுகுறித்து சமூகவலைதளத்தில் ராகுல் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஹரியானா சட்டசபை தேர்தல் முடிவுகள் தொடர்பாகப் புகார்கள் வந்துள்ளன. பல தொகுதிகளிலிருந்து வந்த புகார்கள்குறித்து தேர்தல் கமிஷனிடம் புகார் அளிக்க உள்ளேன். ஆதரவு அளித்த ஹரியானா மக்களுக்கும், அயராது உழைத்த எங்கள் தொண்டர்களுக்கும் மனமார்ந்த நன்றி.
ஹரியானாவின் எதிர்பாராத முடிவை நாங்கள் பகுப்பாய்வு செய்கிறோம். உரிமைகள், பொருளாதார நீதி மற்றும் உண்மைக்கான இந்தப் போராட்டத்தை நாங்கள் தொடர்வோம். மக்களின் குரலுக்கு ஆதரவாக நிற்போம். ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு முழு மனதுடன் நன்றி. மாநிலத்தில் இண்டியா கூட்டணியின் வெற்றி அரசியலமைப்பு சட்டம் மற்றும் ஜனநாயக சுயமரியாதைக்கான வெற்றி. இவ்வாறு ராகுல் கூறியுள்ளார்.



