
தேர்தல் நிதி பத்திரங்கள் வெளியிட்டது உலகின் மிகப் பெரும் மிரட்டிப் பணம் பறிப்பு மோசடி என்று குறிப்பிட்ட ராகுல் காந்தி, இதற்கு அடியாட்களாகச் செயல்பட்ட மத்திய அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ அதிகாரிகளுக்குத் தண்டனை உறுதியென எச்சரிக்கை விடுத்தார்.
ஊழல்பற்றிப் பேசத் தகுதியற்ற பாஜக:
மும்பை:ஊழலை ஒழிப்பதாகக் கூறி ஆட்சிக்கு வந்த பாஜக தேர்தல் பத்திர மோசடிக்குப் பின் ஊழல்குறித்து பேசும் தகுதியை இழந்துவிட்டதாகப் பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
சுவிஸ் வங்கியில் இருக்கும் கருப்புப் பணத்தை மீட்டு ஒவ்வொரு இந்தியரின் வங்கி கணக்கிலும் ரூ. 15 லட்சம் வரவு வைக்கப்படும் என்று கூறி ஆட்சிக்கு வந்த பாஜக தேர்தல் பத்திரம்மூலம் பெறப்பட்ட நிதிகுறித்த தரவுகளை மூடிமறைக்க முயன்றதில் இருந்தே ஊழல்குறித்து பேசத் தகுதியற்ற கட்சி என்ற நிலைக்குச் சென்று விட்டது என்று குற்றம்சாட்டுகின்றனர்.
“கிக் பேக்” லஞ்ச பணம்:
எஸ்.பி.ஐ. வங்கி வெளியிட்டுள்ள இந்தத் தேர்தல் பத்திர தரவுகளின் கூடுதல் விவரங்களை அதாவது தேர்தல் பத்திர எண் உள்ளிட்டவற்றை வழங்குமாறு உச்சநீதிமன்றம் தனது புதிய உத்தரவில் கூறியுள்ளது.
இந்த நிலையில் அரசு திட்டங்களைச் செயல்படுத்தும் நிறுவனங்களிடமிருந்து ஆதாயம் பெறவும் பல்வேறு பொருளாதார குற்றங்களில் ஈடுபட்ட நிறுவனங்களிடம் இருந்தும் முறையற்ற சேவைகளை வழங்க ‘கிக்பேக்’ எனும் லஞ்சப்பணத்தை தேர்தல் பத்திரங்கள்மூலம் பாஜக தேர்தல் நிதியாகப் பெற்றுள்ளது தெரியவந்துள்ளது.
இதனால் பாஜக ஊழலுக்கு அப்பாற்பட்ட கட்சி என்ற உத்தம வேஷம் போடுவது இனியும் எடுபடாது என்று அரசியல் விமர்சகர்கள் கூறிவருகின்றனர்.
ராகுல் கடும் எச்சரிக்கை:
இதற்கிடையில் இந்த விவகாரம் கொடுத்துக் கருத்து தெரிவித்த ராகுல் காந்தி மத்திய அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ ஆகியவை பாஜக, ஆர்எஸ்எஸ்.சின் அடியாட்களாக (கைப்பாவையாக) மாறிவிட்டன.
பாஜக அரசு அகற்றப்பட்டு காங்கிரஸ் ஆட்சி அமையும்போது இது போன்ற செயல்களில் ஈடுபட்ட அதிகாரிகள் தண்டிக்கப்படுவது உறுதி என்று எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.
பாரத் ஜோடோ நியாய யாத்திரை கடைசி கட்டமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்று வருகிறது. இந்த யாத்திரையின் நடுவே தானே-வில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி கூறியதாவது:-
” அரசு திட்டங்களைச் செயல்படுத்தும் நிறுவனங்களிடமிருந்து ஆதாயம் பெறவும் பல்வேறு பொருளாதார குற்றங்களில் ஈடுபட்டு பொதுமக்களின் பணத்தை சுரண்டிய நிறுவனங்களிடம் இருந்தும் தேர்தல் பத்திரங்கள்மூலம் பாஜக தேர்தல் நிதி பெற்றுள்ளது தெரியவந்துள்ளது.
மேலும், பெருநிறுவனங்களிடமிருந்து அதன் ஷெல் கம்பெனிகள்மூலம் கோடிக்கணக்கில் தேர்தல் பத்திரங்கள்மூலம் பாஜக ஆதாயமடைந்துள்ளது.
பாஜக-வின் இந்தச் சட்டவிரோத செயல்களைச் செயல்படுத்தும் கருவியாக அடியாட்களைப் போல் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ அமைப்புகள் பயன்படுத்தப்பட்டுள்ளது.
தேர்தல் பத்திரங்கள்மூலம் நிதியளித்த நிறுவனங்களின் தரவுகள் மற்றும் நிதியளிப்பதற்கு முன்னோ அல்லது பின்னோ அந்த நிறுவனங்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளே இதற்குச் சான்றாக உள்ளது.
காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்கும் காலம் வரும்போது பாஜக-வின் தேவைகளைப் பூர்த்தி செய்யச் சட்டத்திற்கு புறம்பாகச் செயல்பட்ட அரசு அதிகாரிகள்மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்று ராகுல் காந்தி உறுதியளித்தார்.
மேலும், இந்த அதிகாரிகளுக்கு வழங்கப்படும் தண்டனை இனி அரசு அதிகாரிகள் இது போன்ற செயல்களில் ஈடுபடாத வகையில் இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.



