
பாரத மாதா ஒவ்வொரு இந்தியனின் குரல்! ராகுல் சுதந்திர தினவாழ்த்து…
புதுடெல்லி: காங்கிரஸ் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான ராகுல் காந்தி, சுதந்திர தினத்தையொட்டி, டுவிட்டரில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், பாரத மாதா ஒவ்வொரு இந்தியனின் குரல். நாட்டு மக்கள் அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளார். மேலும் அவர் தனது இந்திய ஒற்றுமை யாத்திரை அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார்.
இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கடந்த ஆண்டு நான் 145 நாட்கள் யாத்திரை மேற்கொண்டேன். கடலின் ஓரத்தில் தொடங்கி வெப்பம், தூசி, மழை வழியாக நடந்தேன். காடுகள், நகரங்கள் மற்றும் மலைகள் வழியாக மென்மையான பனி விழும் காஷ்மீரை அடைந்தேன்.
யாத்திரையில் சில நாட்கள் வலி வந்துவிட்டது. என் பழைய முழங்கால் காயம் காரணமாக அந்த வலி ஏற்பட்டது. சில நாட்கள் நடைபயணத்தில் என் பிசியோதெரபியும் எங்களுடன் சேர்ந்து அறிவுரை வழங்கினார். ஆனால் வலி அப்படியே இருந்தது. ஒவ்வொரு முறை யாத்திரையை நிறுத்துவதை பற்றியும், விட்டுக் கொடுக்க நினைக்கும்போதும் யாரோ ஒருவர் வந்து, இந்த யாத்திரை தொடர எனக்கு ஆற்றலைப் பரிசளித்தார்.
யாத்திரை முன்னேறிச் சென்றபோது மக்கள் அதிகளவில் இணைந்தனர். வலி தொடர்ந்து இருந்தாலும் அது எனக்கு முன்னோக்கி செல்லப் புதிய ஊக்கத்தை கொடுத்தது. அவர்களை நான் கவனிக்கவும், அவர்கள் கூறுவதை கேட்கவும் தொடங்கினேன். என் அன்பின் பொருளைத் திடீரென்று தன்னை வெளிப்படுத்தியது, என் அன்பிற்குரிய பாரத மாதா ஒரு நிலம் அல்ல. ஒரு எண்ணங்களின் தொகுப்பு அல்ல. அது ஒரு குறிப்பிட்ட கலாசாரம், வரலாறு அல்லது மதம் அல்ல. அது ஒரு சாதியும் அல்ல.
எவ்வளவு பலவீனமானாலும் சரி, வலிமையானாலும், ஒவ்வொரு இந்தியனின் குரலாக இந்தியா இருந்தது. எல்லா குரல்களிலும் ஆழமாக மறைந்திருந்த மகிழ்ச்சியும், பயமும், வேதனையும் இந்தியாவாகவே இருந்தது. இவ்வாறு அவர் கூறினார்.

