
சென்னை முழுவதும் தெருக்களில் சுற்றித்திரியும் நாய்களைப் பிடித்துத் தடுப்பூசி போடும் பணியைத் தீவிரப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
சென்னை: சென்னை ராயபுரத்தில் தெருநாய் ஒன்று பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் என்று 28 பேரைக் கடித்து குதறியது. இதையடுத்து அந்த நாய் கல்லால் அடித்துக் கொல்லப்பட்டது. இந்த நிலையில் அந்த நாய்க்குச் செய்யப்பட்ட உடற்கூராய்வில் ரேபிஸ் தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது.
இதையடுத்து நாய் கடித்து சிகிச்சை பெற்றுவரும் அனைவரும் 5 டோஸ் தடுப்பூசி கட்டாயம் செலுத்திக்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், சென்னை முழுவதும் தெருக்களில் சுற்றித்திரியும் நாய்களைப் பிடித்துத் தடுப்பூசி போடும் பணியைத் தீவிரப்படுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
கடந்த வருடம் 16 ஆயிரம் நாய்கள் பிடிக்கப்பட்டு, ரேபிஸ் தடுப்பூசி போடப்பட்டது. நடப்பாண்டில் இதுவரை 17,813 நாய்களைப் பிடித்து ரேபிஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


