Pulhal Lake: ஆபத்தான நிலையில் ஏரி!

Advertisements

திருவள்ளூர் மாவட்டத்தில் இருக்கும் புழல் ஏரி சுற்றுச்சுவர் ஒரு பகுதி மண்ணரிப்பால் கீழே சரிந்து விழுந்து சாலைகள் சேதமடைந்துள்ளது. இது புழல் ஏரி ஆபத்தான நிலையில் இருப்பதை உணர்த்துவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் ஒன்றான புழல் ஏரி 3300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்டது. வங்க கடலில் உருவான மிக்ஜாம் புயல் காரணமாக இரு தினங்களாக சென்னை மற்றும் திருவள்ளூரில் கன மழை கொட்டி தீர்த்தது. இதனால் புழல் ஏரியின் நீர்வரத்து படிப்படியாக உயர துவங்கியது.

இதன் காரணமாக புழல் ஏரியிலிருந்து முதலில் 500 கன அடி திறக்கப்பட்டு பிறகு படிப்படியாக உயர்த்தப்பட்டு நேற்று இரவு 5500 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டது. இருப்பினும் மழையின் அளவு சென்னை திருவள்ளூரில் அதிகமாக காணப்பட்டதால் ஏரிக்கு நீர்வரத்து சுமார் 10,000 கனஅடியாக நேற்று இரவு உயர்ந்துள்ளது.

இதனால் ஏரியின் முழு கொள்ளளவு எட்டியதால் கரையின் சுவர்கள் மேல் இருந்து தண்ணீர் வெளியேற தொடங்கியது. இதனால் ஏரியின் சுற்று சுவர் பகுதியில் மண்ணரிப்பு ஏற்பட்டு சேதம் அடைந்தது. ஏரியின் சுற்றுச் சுவரின் ஒரு பகுதி நேற்று இரவு கீழே சரிந்து விழுந்தது. இதில் இருந்து தண்ணீர் வெளியே வர தொடங்கியது. மேலும் அருகில் உள்ள சாலையில் தண்ணீர் சென்றதால் தார் சாலைகள் முழுவதுமாக விரிசல் ஏற்பட்டது.

செங்குன்றம் அதன் சுற்றுவட்டார பகுதியில் நேற்று மாலை 4.45 மணி முதல் தொலைபேசி தொடர்பு முழுவதுமாக துண்டிக்கப்பட்டதால் தற்போது வரை அதிகாரிகள் கவனத்துக்கு ஏரியின் பாதிப்பு குறித்த தகவல் செல்லவில்லை என்றும் கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் தெரிவிக்க எந்தவித தொலைதொடர்பும் இல்லாததால் பொதுப்பணித்துறை அதிகாரிகள் காவல்துறையினர் மேல் அதிகாரிகளிடம் நிலவரத்தை கூறமுடியவில்லை என்றும் கூறப்படுகிறது.

உடனடியாக இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் தகவல் கொண்டு சென்று தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும், பொதுமக்கள ஆபத்தை உணராமல் இடிந்து விழுந்த கரையின் மேலே நின்று அதனை பார்ப்பதற்கு கூட்டம் கூட்டமாக வருவதால் பெரும் சேதம் ஏற்படும் வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *