
தீபாவளி பரிசாக ரூ.490 வங்கி கணக்கில் புதுச்சேரி அரசு டெபாசிட்!
தீபாவளிக்கு புதுச்சேரி அரசு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, புதுச்சேரியில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் சர்க்கரை மற்றும் அரிசி வழங்குவதற்கு பதிலாக, அதற்கு ஈடான தொகையாக ரூ.490 தீபாவளி பரிசு வழங்க இருப்பதாக செய்தி வெளியானது.
புதுச்சேரி யூனியன் பிரதேச அரசு அறிவித்த 490 ரூபாய் தொகை, அவர்களது வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்படும் என்று புதுச்ச்சேரி மாநில அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு ரேஷன் கடைகளில் வழங்கப்படுவது வழக்கம்.
அதுபோல, புதுச்சேரியில் தீபாவளி இலவச ரேஷன் பொருட்களின் தொகுப்பிற்கு பதிலாக, ரேஷன் அட்டைதாரர்களின் வங்கி கணக்குகளில் ரூ.490 செலுத்தப்படும் என புதுச்சேரி மாநில அரசு அறிவித்துள்ளது.
ரேஷன் கடைகளில் வழங்கப்படும் 10 கிலோ அரிசி, 2 கிலோ சர்க்கரைக்கு ஆகும் தொகையாக 490 ரூபாய் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும். இதன்படி, 3 லட்சத்து 37 ஆயிரத்து 406 குடும்ப அட்டைதாரர்களின் வங்கி கணக்குகளில் சுமார் 16.53 கோடி ரூபாயை புதுச்சேரி மாநில அரசு டெபாசிட் செய்யும்.
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு தீபாவளிக்கு டிபிடி முறையில் (DBT mode) இலவச அரிசி, சர்க்கரைக்கு இணையான ரொக்கம் வழங்கப்படும் என்ற அறிவிப்பை, புதுச்சேரி குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை இயக்குநர் (Director of Civil Supplies and Consumer Affairs) எஸ்.சத்தியமூர்த்தி நவம்பர் 7ஆம் தேதி வெளியிட்ட அறிவிக்கையில் தெரிவித்துள்ளார்.
மேலும், நேற்று அவர் வெளியிட்ட அறிவிப்பில், 3.37 லட்சம் குடும்ப ரேஷன் கார்டுதாரர்களுக்கு தலா ரூ.490 நேரடிப் பலன் பரிமாற்ற முறையில் வழங்கப்படும் என்று தெரிவித்த நிலையில், அரசு ஊழியர்களுக்கு இந்த தொகை செலுத்தப்படாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் நியாய விலைக்கடைகள் மூலம் அரிசி மற்றும் சர்க்கரையை விநியோகம் செய்து வந்தது. இனி வரும் தீபாவளி பண்டிகைக்கு இலவச அரிசி மற்றும் சர்க்கரைக்கு இணையான ரொக்கம் அட்டைதாரர்களின் வங்கிக் கணக்குகள் மூலம் செலுத்தப்படும் என்று தெரிகிறது.


