
மோடியின் சீரிய நிர்வாகத்தில் நாட்டில் மின்சாரம் இல்லாத கிராமமும் இல்லை வீடும் இல்லையென மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
பாஜக பிரச்சார துண்டு பிரசுரத்தில் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா படத்தைப் போட்ட பாஜக நிர்வாகிமீது நடவடிக்கை எடுக்கப்படும் மாநில தலைவர் செல்வகணபதி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி மக்களவை தொகுதியில் பாஜக போட்டியிட உள்ளதால் அக்கட்சி தேர்தல் பணிகளைத் தீவிரப்படுத்தி வருகின்றது. அந்த வகையில் புதுச்சேரி மாநில பாரதீய ஜனதா கட்சியின் மாநில செயல் வீரர்கள் கூட்டம் அக்கட்சியின் தலைவர் செல்வகணபதி தலைமையில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி மற்றும் பாஜக மேலிடப் பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா, பாஜக அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் மற்றும் மாநில நிர்வாகிகள் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் பங்கேற்றனர்.
விழாவில் தலைமையுரையாற்றிய மாநில தலைவர் செல்வகணபதி புதுச்சேரி தேர்தல் பிரச்சாரத்திற்காக வெளியிடப்பட்ட பாஜக துண்டு பிரசுரத்தில் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா படத்தைப் பொறுப்பற்ற முறையில் பிரசுரித்த பாஜக நிர்வாகிமீது நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்த செல்வகணபதி,
பாஜக தான் முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது, ஆனால் அதிமுகவால் வேட்பாளர் பட்டியலை வெளியிடமுடியவில்லை அவர்களால் வெற்றி பெறமுடியாத நிலையில் பாஜகவை விமர்சிக்க எந்தத் தகுதியும் இல்லையெனச் செல்வகணபதி பேசினார்.
அதனைத்தொடர்ந்து பேசிய மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் ரூ. 2 லட்சத்து 82 ஆயிரம் கோடி நிலக்கரியில் அந்தக் கட்சி ஊழல் செய்துள்ளார்கள் என்றும், நாட்டில் இன்னும் 300 ஆண்டுகளுக்குத் தேவையான நிலக்கரி இருக்கும்போது கமிஷன் பெறுவதற்காக வெளிநாட்டிலிருந்து காங்கிரஸ் கட்சி இறக்குமதி செய்ததாகக் குற்றஞ்சாட்டியவர், பாஜக ஆட்சிக்கு வந்தபிறகு நிலக்கரியை இனி வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்ய வேண்டியது அவசியமில்லையென முடிவு செய்யப்பட்டதாகவும், மோடி பிரதமராகப் பதவி ஏற்றப்பின்பு மின்வெட்டு என்பதில்லை என்றும், நாட்டில் மின்சாரம் இல்லாத கிராமமும் இல்லை வீடும் இல்லையெனப் பெருமிதம் கொண்டார்.
மேலும் 200 ஆண்டுகள் இந்தியாவை அடிமைபடுத்தி ஆட்சி செய்தபிரிட்டிஷ் நாட்டைப் பின்னுக்கு தள்ளி இந்தியா பொருளாதாரத்தில் முதன்மையில் இருப்பதற்கு பிரதமர் மோடி தான் காரணம் மீண்டும் மோடி பிரதமரால் உலக அளவில் பொருளாதாரத்தில் இந்தியா முதலிடத்தை பிடிக்கும் என்றார்.
மக்களவை தேர்தலையொட்டி முதன்முதலாகத் தேர்தல் அலுவலகத்தைத் திறந்த புதுச்சேரி பாஜக சூட்டோடு சூடாக அக்கட்சியின் செயல்வீரர்கள் கூட்டத்தையும் நடத்தி தேர்தல் பணிகளை விறுவிறுப்பாகச் செய்து வருகின்றது.


