
கோடா: மக்களுக்கு அதிக அதிகாரம் அளிப்பதே காங்கிரசின் கொள்கையாக இருந்து வருவதாகக் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா பேசியுள்ளார்.
ஜார்க்கண்ட் மாநிலம் கோடா பகுதியில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் பிரியங்கா பேசியதாவது: மக்களுக்கு அதிக அதிகாரம் அளிப்பதே காங்கிரசின் கொள்கையாக இருந்து வருகிறது. ஆனால், பா.ஜ., அரசால் நிலையான கொள்கையைக் கூட வகுக்க முடியவில்லை. பொய்யான அறிக்கைகள் மற்றும் வழக்குகள்மூலம் ஜார்க்கண்ட் முதல்வராக இருந்த ஹேமந்த் சோரனை சிறையில் அடைத்துள்ளனர். அவர்மீது தொடரப்பட்ட வழக்கு உண்மையானது கிடையாது. ஹேமந்த் சோரன் இல்லாமல் மக்கள் தேர்தலை எதிர்கொள்ள உள்ளனர்.
ஹேமந்த் சோரனை சிறையில் அடைத்துவிட்டு, தேர்தலில் எளிதில் வெற்றி பெறலாமெனப் பிரதமர் மோடி நினைத்திருப்பார். ஆனால் இன்று, ஹேமந்த் பதிலாக அவரது மனைவி கல்பனா போராடுகிறார். அனைத்து பிரச்னைகளையும் சிங்கம்போல எதிர்கொள்கிறார். இண்டியாக் கூட்டணியின் திட்டங்களைப் பற்றி எல்லோரிடமும் சொல்லிக் கொண்டிருக்கிறார். நான் அவளை என் தங்கையாகவும், பெண் சக்தியின் அடையாளமாகவும் கருதுகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.


