
புதுடில்லி: 70 ஆண்டுக்கும் மேலாக கொள்ளையடிக்கும் பழம் பெரும் காங்கிரஸ் கட்சி இருக்கும்போது, பணம் கொள்ளையடிக்கும் கற்பனைக்கதைகள் யாருக்குத் தேவை என பிரதமர் மோடி கிண்டல் செய்துள்ளார்.
ஜார்க்கண்ட் காங்., – எம்.பி., தீரஜ் சாஹுவின் தொடர்புடைய ஒடிசா மதுபான ஆலைக்கு சொந்தமான இடங்களில் கடந்த 6ம் தேதி முதல் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். சோதனையில் கட்டுக்கட்டாக பண மூட்டைகள் கைப்பற்றப்பட்டன. மொத்தம் 353 கோடி ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
காங்கிரஸ் எம்.பி.,க்கு தொடர்புடைய இடங்களில் இவ்வளவு பணம் கைப்பற்றப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து வரும் பா. ஜ., காங்கிரஸ் ஒரு ஊழல் கட்சி என்று விமர்சித்து வருகிறது.
காங்., – எம்.பி., தீரஜ் சாஹுவின் தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்திய போது பீரோக்களில் கட்டு கட்டாக பணம் இருக்கும் வீடியோ வெளியானது. இந்த வீடியோவை பா.ஜ., தனது எக்ஸ் சமுகவலைதளத்தில் பகிர்ந்திருந்தது.
இதனை இன்று (டிச.,12) ஷேர் செய்துள்ள பிரதமர் மோடி, “இந்தியாவில் 70 ஆண்டுகால பழமையான கொள்ளையடிக்கும் காங்கிரஸ் கட்சி இருக்கும் போது, பணம் கொள்ளையடிக்கும் கற்பனைக்கதைகள் யாருக்குத் தேவை” என கிண்டல் செய்துள்ளார்.


