
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகும் சூர்யா 44 படத்தில் ஹீரோயினாக நடிக்க நடிகை பூஜா ஹெக்டே வாங்கிய சம்பள விவரம் வெளியாகி உள்ளது.
பான் இந்தியா நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன்முதலில் ஹீரோயினாக அறிமுகமானது தமிழ் படத்தில் தான். மிஷ்கின் இயக்கத்தில் வெளியான முகமூடி திரைப்படத்தின் மூலம் தான் ஹீரோயினாக எண்ட்ரி கொடுத்தார் பூஜா ஹெக்டே. அப்படம் அட்டர் பிளாப் ஆனதால் கோலிவுட்டுக்கு டாட்டா காட்டிவிட்டு சென்ற பூஜா ஹெக்டே, பின்னர் டோலிவுட்டில் பிசியானார். அங்கு முன்னணி ஹீரோக்களில் நடித்துப் பேமஸ் ஆனார்.
அதுமட்டுமின்றி டோலிவுட்டில் அவர் நடித்த படங்கள் வரிசையாக ஹிட்டானதால் ராசியான நடிகையாகவும் வலம் வந்தார். டோலிவுட்டில் தொடர் வெற்றிகளைக் கொடுத்து வந்த பூஜா ஹெக்டேவை மீண்டும் தமிழுக்கு அழைத்து வந்தார் நெல்சன். அவர் இயக்கிய பீஸ்ட் படத்தின் மூலம் 10 ஆண்டுகளுக்குப் பின் கோலிவுட்டில் ரீ-எண்ட்ரி கொடுத்தார் பூஜா ஹெக்டே. அப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார் பூஜா. ஆனால் அப்படமும் விமர்சன ரீதியாகப் படுதோல்வியை சந்தித்தது.
அதன்பின்னர் மீண்டும் டோலிவுட் பக்கம் சென்ற பூஜாவுக்கு ராதே ஷியாம் மற்றும் ஆச்சார்யா ஆகிய திரைப்படங்கள் படு தோல்வியைக் கொடுத்தன. இதனால் டோலிவுட்டிலிருந்து பாலிவுட்டுக்கு தாவினார் பூஜா. அங்குச் சல்மான் கான் நடிப்பில் வெளிவந்த வீரம் பட ரீமேக்கில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். இப்படி பான் இந்தியா அளவில் நடித்து வந்தாலும் எதிர்பார்த்த வெற்றி கிடைக்காமல் ஏங்கிக் கொண்டிருக்கிறார் நடிகை பூஜா ஹெக்டே.
பொதுவாக நடிகைகள் தாங்கள் நடித்த படங்கள் பிளாப் ஆனால் சம்பளத்தை குறைத்துவிடுவர். ஆனால் பூஜா ஹெக்டே, அதற்கு அப்படியே நேர் எதிராக இருக்கிறார். தமிழில் இதுவரை அவர் நடித்த இரண்டு படங்களும் அட்டர் பிளாப் ஆகிவிட்டன. ஆனாலும் தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் அவர் நடித்து வரும் சூர்யா 44 படத்துக்காக ரூ.4 கோடி சம்பளம் வாங்கி இருக்கிறார். இதற்கு முன்னர் வரை ரூ.3 கோடி வாங்கி வந்த பூஜா, தற்போது ரூ.1 சம்பளத்தை கூட்டி இருப்பது பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.




