
பிரதமர் நரேந்திர மோடி இன்று முதல் 21-ந்தேதி வரை நைஜீரியா, பிரேசில், கயானா ஆகிய 3 நாடுகளுக்கு 6 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
நைஜீரியா அதிபர் போலா அகமது தினுபு அழைப்பின் பேரில் பிரதமர் நரேந்திர மோடி இன்று அந்நாட்டுக்கு அரசுமுறை பயணமாகப் புறப்பட்டுச் சென்றார்.
17 ஆண்டுகளுக்குப் பிறகு நைஜீரியா செல்லும் முதல் இந்திய பிரதமர் என்ற பெருமை அவருக்குக் கிடைக்கும். இந்தப் பயணத்தின்போது அங்கு வசிக்கும் இந்தியர்களை அவர் சந்தித்து பேச உள்ளார். நாளை அந்நாட்டு அதிபர் போலா அகமது தினுபுவை சந்தித்து இருதரப்பு உறவைப் பலப்படுத்துவது குறித்து பேசுகிறார்.
நைஜீரியா பயணத்தை முடித்துக் கொண்டு பிரேசில் செல்லும் மோடி ரியோ டி ஜெனிரோ நகரில் 18-ந்தேதி தொடங்கும் ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார். இந்த மாநாட்டுக்குப் பிரேசில் அதிபர் லுயிஸ் இனாசியோ லுலா டாச்சில்வா தலைமை தாங்குகிறார்.
அதனைத் தொடர்ந்து பிரேசில், கயானா செல்லும் பிரதமர் மோடி, இந்திய வம்சாவளியினருடன் சந்திப்பு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.



