
புதுடில்லி: உலகளாவிய உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்துக் குறைபாடு பிரச்னைக்கான தீர்வை இந்தியா கண்டுபிடித்து உள்ளது எனப் பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
தேசிய விவசாய அறிவியல் மையத்தின் 32வது விவசாய பொருளாதார நிபுணர்களின் சர்வதேச சங்க விழாவில் மோடி பேசியதாவது: இந்தியாவில் 15 விவசாய பருவமண்டலங்கள் உள்ளன. வெவ்வேறு விவசாய நடைமுறைகள் உள்ளன. இந்தப் பன்முகத்தன்மை தான், உலகத்தின் உணவு பாதுகாப்புக்கான நம்பிக்கைக் கதிராக இந்தியா திகழ்கிறது. பெரிய அளவில் பால், பருப்பு உற்பத்திமூலம் இந்தியா உணவு உபரி நாடாகத் திகழ்கிறது. ஒரு காலத்தில் இந்தியாவின் உணவு பாதுகாப்பு சர்வதேச கவலையாக இருந்தது. இன்று உலகளாவிய உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து குறைபாடுக்கான தீர்வை இந்தியா கண்டுபிடித்துள்ளது.
உணவு மற்றும் விவசாயத்திற்கான நமது பாரம்பரியம் மற்றும் அனுபவம் பழங்காலம் முதல் இருந்து வருகிறது. விவசாய பாரம்பரியத்தில் அறிவியலுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. உணவை மருந்தாக எடுத்துக் கொள்ளும் ஆயுர்வேத அறிவியல் நம்மிடம் உள்ளது. சிறுதானியங்கள் அதிகளவில் உற்பத்தி செய்யப்படுகிறது. உலகளாவிய ஊட்டச்சத்து பிரச்னைக்குச் சிறுதானியங்கள் தீர்வாக உள்ளன. இவ்வாறு அவர் பேசினார்.



