
கிருஷ்ணகிரி, சேலம் தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனம் சாலையின் தடுப்புச் சுவற்றில் மோதியதில் தூக்கி வீசப்பட்ட கணவன், கர்ப்பிணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் அரவிந்தன். கட்டிட மேஸ்திரியாகக் கர்நாடக மாநிலம் மைசூரில் பணியாற்றி வருகிறார். இவரும் அதே பகுதியைச் சேர்ந்த அபிநயா என்ற பெண்ணும் காதலித்து கடந்த 8 மாதத்திற்கு முன்பு இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். தற்போது அபிநயா நான்கு மாதம் கர்ப்பிணியாக உள்ளார். இவர்கள் இருவரும் கர்நாடக மாநிலம் மைசூரில் வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் அரவிந்தன் மற்றும் அவரது மனைவி அபிநயா இருவரும் நேற்று இரவு இருசக்கர வாகனத்தில் தனது சொந்த ஊரான தருமபுரிக்கு சென்றுள்ளனர். நள்ளிரவு கிருஷ்ணகிரி சேலம் தேசிய நெடுஞ்சாலையில் டேம் கூட்ரோடு என்னும் இடத்தில் சென்றபோது திடீரெனக் கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம் சாலையோரம் உள்ள தடுப்பின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் அரவிந்தன் மற்றும் அவரது மனைவி அபிநயா இருவரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் இருவரது தலையிலும் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலியே இருவரும் உயிர் இழந்தனர்.
தகவல் அறிந்து சென்ற காவேரிப்பட்டினம் போலீசார் இருவரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காகக் காவேரிப்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்துகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


