
உத்தமபாளையம் அருகே கோவில் திருவிழாவில் ஒலி பெருக்கி இயக்கிட காவல் துறையினர் எதிர்ப்பு தெரிவித்ததால் ஒரு சமூகத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள கோவிந்தன் பட்டியில் அருந்ததிய சமுதாயத்திற்கு பாத்தியபட்ட அம்மன் கோவில் திருவிழா நேற்று மாலை கரகம் எடுத்துத் திருவிழா கொண்டாடி வரும் நிலையில் இன்று அதிகாலை 5 மணிக்கு ஒலிபெருக்கி இசைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அங்கு வந்த காவல்துறையினர் தேர்தல் விதிமுறை நடைமுறையில் உள்ளதால் அதிகாலை நேரத்தில் ஒலிபெருக்கி இசைக்கக் கூடாது எனத் தெரிவித்துள்ளதாக அப்பகுதியில் கூறப்படுகிறது.
இதுகுறித்து காவல்துறையினருக்கும் திருவிழா நடைபெறும் ஒருசமுக மக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதில் காவல்துறையினர் அத்துமீறி ஒரு சமூகமக்களை அடித்ததாகக் கூறி அந்தச் சமூகமக்கள்சாலை மறியலில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு விரைந்த உத்தமபாளையம் காவல் நிலைய போலீசார் அப்போது மக்களைச் சமாதானப்படுத்தி சாலை மறியலில் ஈடுபட்டவர்களைக் கலைத்தனர்
ஒலிபெருக்கி போடக் கூடாது என்று காவல்துறை அடித்ததாகக் கூறி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் கம்பம் – தேனி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாகப் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

