
பாரிஸ் ஒலிம்பிக் 2024 தொடரின் நிறைவு விழா தற்போது நடைபெற்று வருகிறது. இதில் இந்திய தேசிய கொடியை 2 வெண்கலப் பதக்கம் வென்று கொடுத்த மனு பாக்கர் தனது கையில் தேசிய கொடியை ஏந்தி அணி வகுப்பு நிகழ்ச்சி நடத்தினார்.
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் 33ஆவது ஒலிம்பிக் தொடர் கடந்த ஜூலை 26 ஆம் தேதி தொடக்க விழா நிகழ்ச்சியுடன் பிரம்மாண்டமாகத் தொடங்கியது. இதில், இந்தியா சார்பில் 117 விளையாட்டு வீரர்கள் இடம் பெற்று 16 விளையாட்டுகளில் பங்கேற்றனர்.
அதோடு, இந்தியாவிற்கு ஒரு வெள்ளிப் பதக்கம் மற்றும் 5 வெண்கலப் பதக்கம் என்று மொத்தமாக 6 பதக்கங்களை மட்டுமே கைப்பற்றிக் கொடுத்தனர். இதன் காரணமாக இந்தியா ஒலிம்பிக் பதக்கப் பட்டியலில் 71ஆவது இடத்தில் உள்ளது.
ஆனால், கடந்த 2020 ஆம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியா ஒரு தங்கம், 2 வெள்ளி மற்றும் 4 வெண்கலப் பதக்கம் என்று 7 பதக்கங்களுடன் 48ஆவது இடத்தில் இருந்தது.
இதுவரையில் இந்தியா ஒலிம்பிக் தொடரில் பங்கேற்று மொத்தமாக 41 பதக்கங்களைக் குவித்துள்ளது. ஒலிம்பிக் தொடரில் அதிகபட்சமாக ஹாக்கி 8 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளது. மேலும், மல்யுத்த போட்டியிலும் இந்தியா 8 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளது. சிறந்த ஒலிம்பிக் தொடராகக் கடந்த 2020ஆம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக் அமைந்துள்ளது.
பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் அதிகபட்ச தங்கப் பதக்கங்களைக் கைப்பற்றிய அமெரிக்கா பதக்கப் பட்டியலில் நம்பர் 1 இடத்தில் உள்ளது. சீனா 2ஆவது இடத்தில் உள்ளது.
இந்த நிலையில் தான் நள்ளிரவு 12.30 மணிக்குத் தொடங்கிய ஒலிம்பிக் நிறைவு விழாவில் முதலில் பிரான்ஸ் நாட்டு பாடகர்கள் இணைந்து பாடல் பாடி இந்நிகழ்ச்சியை தொடங்கினர். அதன் பிறகு, பிரான்ஸ் நாட்டிற்கு 4 முறை தங்கப் பதக்கம் வென்று கொடுத்த நீச்சல் வீரர் லியோன் மார்க்கண்ட் ஸ்டேட் டி பிரான்ஸுக்கு ஒலிம்பிக் சுடரை கொண்டு சென்றார். இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது.
இதையடுத்து அணி வகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. கிட்டத்தட்ட 250 நாடுகளைச் சேர்ந்த பதக்கம் வென்ற வீரர், வீராங்கனைகள் அந்தந்த நாட்டு கொடிகளைக் கையில் ஏந்தி அணி வகுப்பு நிகழ்ச்சி நடத்தினர்.
இதில் இந்தியா சார்பில் மனு பாக்கர் தேசிய கொடியை ஏந்தி வந்து அணி வகுப்பு நடத்தினார். அவருடன் ஹாக்கி இந்திய அணியின் ஓய்வு பெற்ற கோல் கீப்பர் பிஆர் ஸ்ரீஜேஷ் உடன் வந்தார்.
பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் துப்பாக்கி சுடுதல் போட்டியில் 2 வெண்கலப் பதக்கம் வென்ற மனு பாக்கர் முதலில் பதக்கத்தோடு நாடு திரும்பினார். டெல்லி வந்த அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன் பிறகு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து பேசி அவரிடம் வாழ்த்து பெற்றார்.



