
புதுச்சேரி காலாப்பட்டு மத்திய ஜெயிலில்கிடந்த பார்சலில் ஒரு ஆண்ட்ராய்டு செல்போன் உட்பட 5 செல்போன்கள், ஒய் பை மோடம், பீடி கட்டுகள், கஞ்சா பொட்டலங்கள், 2 சார்ஜர், குட்கா பாக்கெட்டுகள் இருந்தது.
புதுச்சேரி: புதுச்சேரி காலாப்பட்டு மத்திய ஜெயிலில் 200-க்கும் மேற்பட்ட தண்டனை கைதிகள், விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் பிரபல ரவுடிகளும் அடங்குவார்கள். ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள பிரபல ரவுடிகள், தங்களின் வழக்குச் செலவு, குடும்ப செலவுக்குச் சிறைக்குள் இருந்தபடி, செல்போன் மூலம் தொழிலதிபர்களை மிரட்டி மாத, மாதம் மாமூல் வசூலித்து வருகின்றனர்.
இந்த வசூல் பணிகளை 2-ம் கட்ட ரவுடிகள் வசூலித்து ரவுடியின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கின்றனர்.
இதனைத் தடுப்பதற்காக ஜெயிலில் அடிக்கடி ரவுடிகள் அறைகள் சோதனை நடத்தப்பட்டு செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் ஜெயில் வளாகத்தின் உட்பகுதி மதில் சுவர் அருகே ஜெயில் வார்டன்கள் மற்றும் ஊழியர்கள் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது ஒரு பார்சல் கிடந்தது. அதனை எடுத்து ஜெயில் வார்டன்கள் பிரித்துப் பார்த்தபோது, ஒரு ஆண்ட்ராய்டு செல்போன் உட்பட 5 செல்போன்கள், ஒய் பை மோடம், பீடி கட்டுகள், கஞ்சா பொட்டலங்கள், 2 சார்ஜர், குட்கா பாக்கெட்டுகள் இருந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த சிறை காவலர்கள் அதனைப் பறிமுதல் செய்து காலாப்பட்டு போலீசில் ஒப்படைத்தனர்.
ஜெயிலில் உள்ள பிரபல ரவுடிகளுக்குக் கஞ்சா, செல்போன்கள் வீசப்பட்டிருக்கலாமெனக் கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


