
திருப்பூர் மாவட்ட ஊராட்சி குழு நிர்வாகத்தில் தலைவராகிய தனது அனுமதி இல்லாமல் அரசு நிதியைப் பயன்படுத்துவதாக, திருப்பூர் மாவட்ட ஊராட்சிக் குழு செயலரைக் கண்டித்து ஊராட்சி குழுத் தலைவர் வெளிநடப்பு செய்ததால பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஊராட்சிக்குழு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் சத்யபாமா தலைமை தாங்கினார். செயலாளர் முரளி கண்ணன் முன்னிலை வகித்தார். இந்தக் கூட்டத்தில் பேசிய மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் சத்யபாமா, மாவட்ட ஊராட்சி செயலாளர் தன்னிச்சையாகச் செயல்படுவதாகக் குற்றம் சாட்டினார். அரசு மாவட்ட ஊராட்சி பகுதி வளர்ச்சிக்கு ஒதுக்கும் நிதியைத் தனது அனுமதி இல்லாமல் பயன்படுத்துவதாகவும், அலுவலக பயன்பாட்டுக்கு எனப் பொருட்கள் வாங்குவதில் தனது அனுமதியின்றி செயல்படுவதாகவும் குற்றம் சாட்டினார்.
மாவட்ட கூட்டரங்கில் பேசிக் கொண்டிருக்கும்போது இது தொடர்பாக மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் சத்யபாமாவுக்கும், மாவட்ட ஊராட்சி செயலாளர் முரளி கண்ணனுக்கு விவாதம் ஏற்பட்டது. அப்போது மாவட்ட ஊராட்சி குழுச் செயலாளர் முரளி கண்ணன் தனது அறையில் தினமும் படுத்து உறங்குவதாகவும், அங்கேயே பாய், தலையணை, சோப்பு, சீப்பு உள்ளிட்ட பொருட்களை வைத்திருப்பது கண்டிக்கத்தக்கது என மாவட்ட ஊராட்சிக் குழு அரங்கிலேயே பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.
இதைத் தொடர்ந்து ஆவேசமான விவாதத்திற்கு பிறகு மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் சத்யபாமா கூட்ட அரங்கிலிருந்து வெளிநடப்பு செய்வதாகக் கூறி கோபத்துடன் வெளியேறினார். அங்கிருந்து சென்ற அவர் தனது அறையில் மாவட்ட ஊராட்சி செயலாளர் முரளிக்கண்ணன் தூங்குவதற்காக வைத்திருந்த பாய், தலையணை, சோப்பு, சீப்பு உள்ளிட்ட பொருட்களை அனைவரிடமும் காட்டி கேள்வி எழுப்பினார். இதையடுத்து கவுன்சிலர்கள் உள்ளே சென்று மாவட்ட ஊராட்சி தலைவரிடம் சமாதானம் பேசினார்கள்.


