Palani Murugan Temple: நாதஸ்வரம், மேளங்களுக்கு தடை.. பக்தர்கள் எதிர்ப்பு!

Advertisements

பழனி முருகன் கோவிலில் வெளியிலிருந்து அழைத்து வரப்படும் நாதஸ்வரம், மேளங்களை இசைக்கக் கோவில் நிர்வாகம் தடை விதித்துள்ளதற்கு பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும் திருவிழா மற்றும் விசேஷ காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்களும் வருகை தந்து பழனி முருகனை தரிசனம் செய்வது வழக்கம். இந்த நிலையில் பழனி தைப்பூச திருவிழா வருகின்ற 19ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி 25ம் தேதி தைப்பூசத் திருவிழா நடைபெறுகிறது.

இதனை ஒட்டித் தற்போதையிலிருந்து பாதயாத்திரையாக வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதன்படி கரூர் மாவட்டம், தோகைமலையைச் சேர்ந்த பாதயாத்திரையாக வந்த பக்தர்கள் காவடிகள் எடுத்துக்கொண்டு நாதஸ்வரம், மேளங்கள் வாசித்தபடி கிரிவலப் பாதையில் வந்து படிப்பாதை வழியாக மலைக் கோவிலுக்குச் செல்லப் பக்தர்கள் முயன்றனர். அப்போது கோவில் பாதுகாவலர்கள் தடுத்து நிறுத்தியதால் வாக்குவாதம் ஏற்பட்டது.

பழனி கோவிலில் பணிபுரியும் நாதஸ்வர, தவில் ஊழியர்களைத் தவிர வேறு நபர்கள் நாதஸ்வரம், மேளம் அடித்து மலைக்கோவிலுக்கு வர அனுமதி இல்லை என்றும், இது தொடர்பாக விளம்பர பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது என்றும் கூறி தடுத்து நிறுத்தி உள்ளனர். அப்போது பக்தர்கள், 48 வருடமாக வந்து கொண்டிருக்கும் எங்களுக்குப் புதிதாக நாதஸ்வரம், மேளம் அடிப்பதற்கு அனுமதி இல்லையெனக் கூறுவது சரியானது அல்ல என்று கூறிய பக்தர்கள் இது தொடர்பான அரசாணையை காண்பிக்க சொல்லி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து பக்தர்கள் கூறுகையில் மாலை அணிந்து 48 நாட்கள் விரதம் இருந்து ஆண்டுதோறும் மேளதாளங்கள் முழங்க மலைக்கோவிலுக்கு சென்று வரும் நிலையில் திடீரென நாதஸ்வரம், மேளம் வாசிக்கத் தடைவிதித்துள்ள சம்பவம் தங்களுக்கு மன உலைச்சலை ஏற்படுத்தியுள்ளது. உதவி ஆணையரின் உத்தரவை ரத்து செய்து மீண்டும் மேளதாளங்கள் வாசிக்க அனுமதி வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பறை இசைக்கக் கூடாது என்றும் நாதஸ்வரம், மேளம் மட்டும் அடித்துச் செல்லலாமென இதற்கு முன்னாள் இருந்த இணை ஆணையர் நடராஜன் உத்தரவிட்டிருந்தார். தற்போது பறை இசைப்பதற்கும் நாதஸ்வரம் மற்றும் தவில் வாசிக்கத் தடை விதித்துள்ள சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *