புதிய நிபந்தனை விதித்த பாகிஸ்தான்!

9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி (50 ஓவர்) போட்டியை அடுத்த ஆண்டு பிப்ரவரி 19 முதல் மார்ச் 9 வரை பாகிஸ்தானில் உள்ள கராச்சி, லாகூர் ராவல்பிண்டியில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

பாதுகாப்பு காரணங்களுக்காகச் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டிக்காக இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்லாது என்றும், தங்களது அனைத்து ஆட்டங்களையும் துபாயில் விளையாட விரும்புவதாகவும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திடம் இந்திய கிரிக்கெட் வாரியம் திட்டவட்டமாகத் தெரிவித்து விட்டது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் (ஐ.சி.சி.) இதைக் கூறிவிட்டது.

இந்தியாவின் இந்தக் கோரிக்கையை ஏற்க இயலாது என்று பாகிஸ்தான் அறிவித்தது. இதனால் போட்டி அட்டவணையை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டது.

சமீபத்திய ஐ.சி.சி.யின் கூட்டம் இந்திய அணிக்குரிய ஆட்டங்களை வேறு இடத்தில் மாற்றுவதற்கு (ஹை பிரிட் மாடல்) பாகிஸ்தானிடம் வலியுறுத்தப்பட்டது. இதைப் பாகிஸ்தான் ஏற்றுக்கொண்டதாகவும் தகவல் வெளியானது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இதற்கிடையே ஹைபிரிட் மாடலை ஏற்றுக்கொள்ள பாகிஸ்தான் புதிய நிபந்தனை விதித்துள்ளது. இந்தியாவில் நடைபெறும் சர்வதேச போட்டிகளில் தங்களுக்கு உரிய ஆட்டங்களை வேறு நாட்டில் நடத்த வேண்டும் என நிபந்தனை விதித்து உள்ளது.

இதை ஏற்று உறுதியான எழுத்துப்பூர்வமான ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று தெரிவித்தது. இந்த நிபந்தனை 3 ஆண்டுகளுக்கா? அல்லது 2031 வரையிலான ஐ.சி.சி. சுழற்சி முறை போட்டிகள் வரையா? என்று தெரியவில்லை.

இந்தக் காலக்கட்டத்தில் இந்தியாவில் 3 ஐ.சி.சி. போட்டிகள் தொடங்குகிறது. 2026 பிப்ரவரியில் 20 ஓவர் உலக கோப்பையை இலங்கையுடன் இணைந்து நடக்கிறது. 2029-ல் சாம்பியன்ஸ் டிராபி, 2031-ல் உலக கோப்பை போட்டிகளை நடத்துகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *