
ஊரக வேலை உறுதித் திட்டத்துக்கு மகாத்மா காந்தி பெயரை நீக்கியதைக் கண்டித்து, நாடாளுமன்றத்துக்கு வெளியே எதிர்க்கட்சி உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் இருந்து மகாத்மா காந்தியின் பெயரை நீக்கும் மத்திய அரசின் முடிவுக்குக் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
காந்தி மீது ஆளுங்கட்சிக்கு வெறுப்புள்ளதாகவும், அதனால்தான் அவர் பெயரை நீக்குவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளனர். இந்நிலையில் நாடாளுமன்றத்துக்கு வெளியே காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் என்று எழுதிய மிகப்பெரிய பதாகையை ஏந்தியபடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மகாத்மா காந்தியின் பெயரை நீக்கக் கூடாது என்று அவர்கள் வலியுறுத்தினர். போராட்டத்துக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ச்சுன கார்கே, இந்தப் போராட்டம் பெயர் மாற்றத்துக்கானது மட்டுமல்ல, இது வேலை உரிமைக்கானது என்று கூறினார்.
வேலைக்கான உரிமையைப் பறிப்பது ஏழைகளுக்கு மிகவும் இன்னலை ஏற்படுத்தும் என்றும் தெரிவித்தார்.

