ஓப்பன்ஹெய்மர்’படத்தில் சர்ச்சைக் காட்சி! சென்சார் போர்டுக்கு மத்திய அமைச்சர் அறிவுறுத்தல்!

டெல்லி: கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் வெளியான ‘ஓப்பன்ஹெய்மர்’ படத்தில் பாலுறவுக் காட்சிகளின்போது பகவத் கீதை வரி இடம்பெற்றது சர்ச்சையான நிலையில், அக்காட்சிகளை நீக்க சென்சார் போர்டுக்கு மத்திய அமைச்சர் அனுராக் தாக்குர் அறிவுறுத்தியுள்ளார்.

‘அணுகுண்டின் தந்தை’ என்று அழைக்கப்படும் ராபர்ட் ஜெ.ஓப்பன்ஹெய்மரின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள படம் ‘ஓப்பன்ஹெய்மர்’. கிறிஸ்டோபர் நோலன் இயக்கியுள்ள இப்படம் ஜூலை 21-ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. ‘உலகை அழிக்கும் மரணமாக மாறிவிட்டேன்’ என்று வரும் பகவத் கீதை வரி இப்படத்தின் ஒரு முக்கிய அங்கமாக இடம்பெற்றுள்ளது. படத்தின் நாயகனும் நாயகியும் நெருக்கமாக இருக்கும் ஒரு காட்சியில் இந்த வரிகள் இடம்பெறுகின்றன.

இதற்கு சமூக வலைதளங்களில் இந்திய ரசிகர்களில் சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். படத்தில் இடம்பெற்ற பல காட்சிகள் வெட்டப்பட்டு இந்தியாவில் U/A சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. எனினும், மேற்சொன்ன காட்சியை கத்தரிக்காமல் விட்டது ஏன் என்று சென்சார் வாரியத்துக்கு பலரும் கேள்வி எழுப்பி வந்தனர்.

இந்நிலையில், சம்பந்தப்பட்ட காட்சிகளை நீக்க சென்சார் போர்டுக்கு மத்திய அமைச்சர் அனுராக் தாக்குர் உத்தரவிட்டுள்ளதாகவும், மேலும் இந்தக் காட்சிகளுக்கு ஒப்புதல் அளித்த சென்சார் போர்டு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *