
உதகை மாவட்டத்திற்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால் நாளை முதல் 3 நாட்களுக்குச் சுற்றுலா பயணிகள் வருவதை தவிர்க்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் வெயிலின் தாக்கம் கடந்த சில மாதங்களாக உச்சத்தில் இருந்தது.இதன் காரணமாக மக்கள் வீட்டிற்குள் முடங்கிக்கிடக்கும் நிலை உருவானது. மேலும் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டதால் குடும்பம் குடும்பமாக ஊட்டி, கொடைக்கானல் பகுதிக்குச் செல்லத் தொடங்கினர். இதன் காரணமாகப் போக்குவரத்து நெரிசல் அதிகளவு காணப்பட்டது. இதனையடுத்து இ பாஸ் திட்டத்தை நடைமுறைப்படுத்தப்பட்டது
ஊட்டி மற்றும் கொடைக்கானல் பகுதிக்குச் செல்பவர்கள் இ பாஸ் பதிவு செய்து சென்று வருகின்றனர். மேலும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் மலர் கண்காட்சியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இரண்டு தினங்களுக்கு முன்பு உதகையில் மலர் கண்காட்சி தொடங்கப்பட்ட நிலையில், ஏராளமான சுற்றுலா பயணிகள் கண்டு மகிழ்ந்தனர்.இந்த நிலையில் சுற்றுலா பயணிகளுக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில் நீலகிரி மாவட்டத்தில் கன மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாளை முதல் நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்யும் எனத் தெரிவித்துள்ள வானிலை மையம் அரஞ்ச் அலர்ட் விடுத்துள்ளது. அதிகளவு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்பு இருப்பதாகக் கருதப்படுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு சுற்றுலா செல்வதில் சிக்கல் உருவாகியுள்ளது.
இது தொடர்பாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் செய்தியாளர்களிடம் கூறுகையில், உதகை பகுதியில் கன மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது..மேலும் மழை வரும்பொழுது பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளில் பயணம் செய்வதை குறைத்துக்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்தார்.
எனவே நாளை முதல் 3 நாட்களுக்கு(18,19,20) மழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு வருவதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தினார். அதையும் மீறி வருபவர்கள் பாதுகாக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்தார். இந்த நிலையில் வார விடுமுறை தினமான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை சுற்றுலா செல்லப் பொதுமக்கள் திட்டமிட்ட நிலையில் கன மழை காரணமாக ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

