
ஆன்லைன் ரம்மி விளையாடிப் பணத்தை இழந்த மருத்துவக் கல்லூரி மாணவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம் , ரம்மி, போக்கர் போன்ற திறமை சார்ந்த விளையாட்டுகளுக்குப் பொருந்தாது என்று கடந்த ஆண்டு நவம்பர் 10-ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தபிறகு கடந்த 6 மாதங்களில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு பலியாகும் சம்பவங்கள் அடுத்தடுத்து நிகழ்ந்து வருகிறது. இந்தத் தீர்ப்பை எதிர்த்துத் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தும் இதுவரை வழக்கு விசாரணைக்கு வரவில்லை. உச்சநீதிமன்றத்திற்கு தமிழக அரசு அழுத்தம் கொடுத்து வழக்கை விரைவாக விசாரணைக்குக் கொண்டு வர வேண்டும் எனத் தொடர்ந்து ராமதாஸ் மற்றும் அன்புமணி குரல் கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், சென்னை கொருக்குப்பேட்டை ஜே.ஜே. நகரை சேந்தவர் தனுஷ் (23). ஆவடியில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் 3ம் ஆண்டு படித்து வந்தார். ஆன்லைனில் ரம்மி விளையாடிப் பணத்தை இழந்ததாகக் கூறப்படுகிறது. இழந்த பணத்தை எப்படியாவது மீட்க வேண்டும் என்பதால் தந்தையிடம் ரூ.24,000 பணம் கேட்டதாகவும் அதற்குத் தன்னிடம் பணம் இல்லை கூறி வெறும் 4,000 கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து ரூ.4,000 பணத்துடன் அறையின் உள்ளே சென்ற தனுஷ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் தனுஷ் உடலைக் கைப்பற்றிப் பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து தனுஷின் செல்போனை கைப்பற்றிப் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

