
சென்னையில் சினிமா துணை நடிகர் ஒருவரிடம் ஆசை வார்த்தை கூறி அவரிடம் இருந்து பணத்தை ஒரு கும்பல் அபேஸ் பண்ணிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சினிமாவில் துணை நடிகராக நடித்து வருபவர் தாமோதிர கண்ணன். சென்னை வியாசர்பாடியை சேர்ந்த இவருக்கு, சமூக வலைதளம் வாயிலாக அகிலா என்கிற பெண்ணுடைய போன் நம்பர் கிடைத்திருக்கிறது. இதையடுத்து அவருடன் பேசி வந்துள்ள தாமோதிர கண்ணன், ஒரு டேட்டிங் செயலி மூலம் அவருக்கு குறுஞ்செய்தியும் அனுப்பி வந்துள்ளார்.
அப்போது தாமோதிரனிடம் அகிலா ரூ.1000 பணம் அனுப்பினால் தான் தனது ஆபாச வீடியோக்களை அனுப்புவதோடு நிர்வாணமாக வீடியோ காலில் பேசுவதாகவும் கூறி இருக்கிறார்.
அகிலா வீசிய மாய வலையில் சிக்கிய தாமோதிர கண்ணன் அவர் கேட்ட பணத்தை அனுப்பி இருக்கிறார். பணம் அனுப்பிய பின் அகிலாவிடம் இருந்து மெசேஜ் எதுவும் வராததால், போனில் தொடர்பு கொண்டிருக்கிறார் தாமோதிரன். அப்போது போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருப்பதாக பதில் வந்துள்ளது.
பின்னர் மறுநாள் தாமோதிரனை செல்போனில் தொடர்பு கொண்ட ஒரு மர்ம நபர், தான் சைபர் கிரைம் போலீஸ் என்றுகூறி பேசி இருக்கிறார்.
அப்போது உன்னுடன் பழகி வந்த அகிலா தற்கொலை செய்துகொண்டதாகவும், நீ ஆபாச வீடியோ கேட்டதால் தான் அவர் மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்டதாக அந்த நபர் கூறியதால் தாமோதிர கண்ணன் பதறிப்போய் உள்ளார்.
இந்த விவகாரத்தில் உங்கள் மீது நடவடிக்கை எதுவும் எடுக்காமல் இருப்பதற்கு நீங்கள் 60 ஆயிரம் ரூபாய் அனுப்ப வேண்டும் என்று அந்த மர்ம நபர் கேட்டிருக்கிறார். பணம் கொடுக்கவில்லை என்றால் ஆக்ஷன் எடுக்கப்படும் என்றும் மிரட்டி இருக்கிறார்.
இதனால் பதறிப்போன தாமோதிர கண்ணன், தன்னிடம் அக்கவுண்டில் வெறும் ரூ.13 ஆயிரம் மட்டும் தான் இருக்கிறது என்று கூறி அந்த பணத்தை கூகுள் பே மூலம் அந்த மர்ம நபருக்கு அனுப்பி வைத்திருக்கிறார். பின்னர் அந்த எண்ணை தொடர்பு கொண்டபோது அதுவும் சுவிட்ச் ஆப் என வந்துள்ளது. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த தாமோதிர கண்ணன், இதுதொடர்பாக வியாசர்பாடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து அவர் பணம் அனுப்பிய கூகுள் பே நம்பர்களை வைத்து மோசடி கும்பலை பிடிக்கும் முயற்சியில் போலீசார் இறங்கி உள்ளனர்.

