
ஜெயலலிதா பெயர் சூட்டப்பட்ட இந்த பல்கலைக்கழகத்தில் தாங்கள் எந்தவித பாகுபாடும் காட்டவில்லை என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை கலைவாணர் அரங்கில் தமிழ்நாடு ஜெயலலிதா இசை மற்றும் கவின் கலைப் பல்கலை பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில், மாணவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பட்டங்களை வழங்கி கவுரவித்தார். இதை தொடர்ந்து, நடிகர் சிவகுமாருக்கு வாழ்நாள் சாதனைக்காக மதிப்புறு முனைவர் பட்டத்தை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியபோது, பட்டமளிப்பு விழாவிற்கு முதல்வராக மட்டுமல்ல, கலைஞன் என்ற முறையில் வந்துள்ளதாகக் கூறினார்.
நடிகர் சிவகுமார், ஓவியர் சந்துருவுக்கு மதிப்புறு முனைவர் பட்டங்களை வழங்கியதில் பெருமை அடைவதாகத் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், ஜெயலலிதா பெயர் சூட்டப்பட்ட இந்த பல்கலைக்கழகத்தில் தாங்கள் எந்தவித பாகுபாடும் காட்டவில்லை என்றும் இந்த அரசியல் மாண்பு தொடர வேண்டும் எனக் குறிப்பிட்டார்.
இதை தொடர்ந்து, ஜெயலலிதா இசை மற்றும் கவின்கலை பல்கலைக்கழகத்தில் ஊதியம் மற்றும் நிர்வாக செலவிற்கான மானியத்தொகை 5 கோடி ரூபாயாக உயர்த்தப்படும் என்று தெரிவித்தார். இதை யடுத்து, தொழில்நுட்பம் வளர்ந்தாலும், அதுவால் மனிதர்களின் சிந்தனைகளை வெல்ல முடியாது என்றும் தொழில்நுட்பத்தை நம்முடைய பலத்திற்கு பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார்.


