
அடுத்த மூன்று நாட்களுக்குத் தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும் இலேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தென்னிந்திய பகுதிகளின்மேல் ஒரு வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி நிலவுவதாகக் குறிப்பிட்டுள்ளது.
இதன் காரணமாக வட தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய இலேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என்று தெரிவித்துள்ளது.
சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒருசில பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய இலேசான, மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.





