
நேபாளத்தில் வெள்ளப்பேரழிவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 626 ஆக உயர்ந்துள்ளது. தொடர்ந்து மழை பொழிவதால் மீட்புப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள திபெத்தில் கனமழை பெய்ததால் நேபாளத்தின் திரிசூலி ஆற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்படும் என்று நேற்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இதையடுத்து அங்கு மீட்புப் பணிகளும் நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த ஊரில் 500 மீட்டர் தொலைவுக்குச் சாலைகள் அரிக்கப்பட்டுச் சேதமடைந்துள்ளன. இந்தச் சாலையைச் சீரமைத்தால்தான் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள முடியும் என்று கூறப்படுகிறது.
அது மட்டுமல்லாமல் மழைப் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் திரிசூலி ஆற்றில் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருகிறது. இதனால் மீட்புப் பணிக்காக ஹெலிகாப்டரை இயக்குவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் முன்னெச்சரிக்கையாக ஆற்றங்கரையோரப் பகுதிகளைச் சேர்ந்த மக்களை அங்கிருந்து வெளியேற்றிப் பாதுகாப்பான வேறிடங்களில் தங்க வைத்துள்ளனர்.
வெள்ளப் பேரழிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 626 ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டுத் தேசியப் பேரிடர் தணிப்பு மற்றும் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.



