
நேபாளத்திலும் திபெத்திலும் ஆறுகளில் ஏற்பட்ட திடீர்ப் பெருவெள்ளத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 750 ஆக உயர்ந்துள்ளது. மேலும் மூவாயிரம் பேரைக் காணவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
திபெத்தில் பனிப்பாறைகள் உருகிச் சரிந்து ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் நேபாளத்தின் நுவாக்கோட் மாவட்டத்தில் போதேகோசி, கண்டகி ஆறுகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுப் பேரழிவைத் தந்தது.
வெள்ளம் பாதித்த பகுதிகளில் ஹெலிகாப்டர்களின் உதவியுடன் இராணுவத்தினரும், பேரிடர் மீட்புப் படையினரும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
இருபதாயிரம் வீரர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள போதும், கரடு முரடான நிலம், தொடர்ந்து மழை பெய்வது ஆகியவற்றால் மீட்புப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
வெள்ளப்பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 734 ஆக உயர்ந்துள்ளதாகவும், மேலும் 2400 பேரைக் காணவில்லை என்றும் தேசியப் பேரிடர் தணிப்பு மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.
இதேபோல் சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள திபெத்தில் 16 பேர் உயிரிழந்ததாகவும், 546 பேரைக் காணவில்லை என்றும் சீன ஊடகங்கள் தெரிவித்துள்ளன.


