
இந்தியா கூட்டணி அதிக எம்.பி. இடங்களைக் கைப்பற்றி ராகுல் காந்தி பிரதமராவது உறுதியென முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
மறைந்த பிரதமர் ராஜீவ்காந்தி நினைவுதினம் நாளை அனுசரிக்கப்பட உள்ள நிலையில், ராஜீவ் நினைவு தினத்தையொட்டி கர்நாடக மாநில காங்கிரஸ் தொழிலாளர் பிரிவு சார்பில் பெங்களூருவில் தொடங்கிய ராஜீவ்காந்தி ஜோதி யாத்திரை இன்று புதுவை வந்தது.
இதனை ஐ.என்.டி.யூ.சி. மாநில தலைவர் பாலாஜி வரவேற்றார். ஸ்ரீபெரும்புதூர் செல்லும் ஜோதியாத்திரையை வழியனுப்பும் விழா இன்று நடைபெற்றது.
மாநில ஐ.என்.டி.யூ.சி.தலைவர் பாலாஜி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, காங்கிரஸ் சட்டமன்ற கட்சித்தலைவர் வைத்தியநாதன், முன்னாள் அமைச்சர் கந்தசாமி உட்பட காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய நாராயணசாமி,பா.ஜனதாவுக்கு பாடம் புகட்ட மக்கள் தயாராகிவிட்டனர். எனவே பாராளுமன்ற தேர்தலில் அதிக எம்.பி இடங்களைக் கைப்பற்றி இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வரும். ராகுல்காந்தி பிரதமர் ஆவார் என்றார்.


