
டுவிட்டர் மூலம் வேண்டுகோள் விடுத்திருந்த சிறுமியையும், அவரது குடும்பத்தினரையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான் தங்கி இருந்த இடத்திற்கு அவர்களை வரவழைத்துச் சந்தித்து பேசி, மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்…
மும்பை: மும்பை சென்றிருந்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு மும்பையை சேர்ந்த வேணுகோபால் அய்யங்கார் என்பவர் டுவிட்டர் மூலம் வேண்டுகோள் விடுத்திருந்தார். அதில் மும்பைக்கு வருகை தந்து உள்ள தங்களை வரவேற்கிறேன். என்னுடைய மகள் உங்களைச் சந்திக்க விரும்புகிறாள். எனவே தயவு கூர்ந்து நீங்கள் தங்கி இருக்கும் கிராண்ட் ஹையாத் ஓட்டலில் சந்திக்க நேரம் ஒதுக்கித் தாருங்கள் என்று கேட்டிருந்தார்.
இது தொடர்பாக அவரது மகள் டுவிட்டரில் குரல் வடிவில் பதிவிட்டது வருமாறு:- நான் உங்களைப் பெரிதும் விரும்புகின்ற காரணத்தால் உங்களைக் குடும்பத்துடன் சந்திக்க ஆர்வமாக உள்ளேன். இந்தத் தருணத்தில் நீங்கள் மும்பை வருவதால் அதுவும் எனக்கு நல் வாய்ப்பாக அமைந்து விட்டது. என்னுடைய பெற்றோரும், தாத்தாவும் உங்களைப் பெரிதும் விரும்புவார்கள்.
உங்களைச் சந்திக்க எங்களுக்கு வாய்ப்பு கிடைத்தால் நாங்கள் மிக்க மகிழ்ச்சி அடைவோம். இவ்வாறு அதில் கூறி உள்ளார். இதையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான் தங்கி இருந்த இடத்திற்கு அவர்களை வரவழைத்துச் சந்தித்து பேசி, அச்சிறுமியையும், அவரது குடும்பத்தினரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.

