சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி மேல்முறையீடு!

Advertisements

புதுடெல்லி: ஆட்கொணர்வு மனு தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. ‘கைது நடவடிக்கை சட்ட விரோதமானது அல்ல’ என்று 3-வது நீதிபதி சிவி கார்த்திகேயன் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து செந்தில் பாலாஜி மேல்முறையீடு செய்துள்ளார்.

சட்ட விரோத பணப் பரிமாற்ற வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறையினர் கடந்த ஜூன் 14-ம் தேதி சென்னையில் உள்ள அவரது வீட்டில் கைது செய்தனர். அப்போது, அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதால், அண்ணா சாலையில் உள்ள அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அவருக்கு உடனடியாக பைபாஸ் இதய அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் பரிந்துரைத்தனர். உயர் நீதிமன்ற உத்தரவுப்படி கடந்த 15-ம் தேதி தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு கடந்த 21-ம் தேதி இதய அறுவை சிகிச்சை நடந்தது. அவரது நீதிமன்ற காவல் வரும் 26-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருந்தது.

இதற்கிடையே, உயர் நீதிமன்றத்தில் அவரது மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை விசாரித்த ஜெ.நிஷாபானு, டி.பரத சக்ரவர்த்தி ஆகிய 2 நீதிபதிகள் கடந்த 4-ம் தேதி மாறுபட்ட தீர்ப்பை அளித்தனர். ‘‘தனியார் மருத்துவமனையில் செந்தில் பாலாஜி இன்னும் அதிகபட்சம் 10 நாட்கள் வரை தங்கி சிகிச்சை பெறலாம். அதன்பிறகு, சிறை அல்லது, சிறைத் துறை மருத்துவமனைக்கு மாற்றப்பட வேண்டும்’ என்று நீதிபதி பரதசக்ரவர்த்தி உத்தரவிட்டார்.

பின்னர், 3-வது நீதிபதியாக நியமிக்கப்பட்ட சி.வி.கார்த்திகேயன் இந்த வழக்கை கடந்த 14-ம் தேதி விசாரித்து, ‘செந்தில் பாலாஜியை கைது செய்தது, நீதிமன்ற காவலில் வைத்தது சட்டப்பூர்வமானது’ என்று தீர்ப்பளித்தார்.

நீதிபதி பரத சக்ரவர்த்தி அளித்த 10 நாள் அவகாசம் முடிவடைந்த நிலையில், மருத்துவமனையில் இருந்து செந்தில் பாலாஜி நேற்று மாலை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். பின்னர் புழல் மத்திய சிறைக்கு கொண்டு வரப்பட்டார்.

சிறை வளாகத்தில் உள்ள மருத்துவமனையில் வைத்து அவரை மருத்துவர்கள் குழு சில நாட்கள் கண்காணிக்க உள்ளனர். உடல்நலம் சற்று தேறிய பிறகு, விசாரணை கைதிகளுக்கான முதல் வகுப்பு அறைக்கு மாற்றப்பட உள்ளார்.

இந்நிலையில், 3-வது நீதிபதியாக நியமிக்கப்பட்ட சி.வி.கார்த்திகேயன் இந்த வழக்கை கடந்த 14-ம் தேதி விசாரித்து, ‘செந்தில் பாலாஜியை கைது செய்தது, நீதிமன்ற காவலில் வைத்தது சட்டபூர்வமானது’ என்று அளித்த தீர்ப்பை எதிர்த்து செந்தில் பாலாஜி மேல் முறையீடு செய்துள்ளார். இந்த வழக்குக்கான எண்ணும் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *