அரியானாவில் தற்கொலை செய்து கொண்ட ஐபிஎஸ் அதிகாரி பூரண்குமாரின் குடும்பத்தினரை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி சந்தித்து ஆறுதல் தெரிவித்துள்ளார்.
அரியானா மாநிலக் காவல்துறையில் பணியாற்றி வந்த இந்திய காவல் பணி அதிகாரி பூரண் குமார், உயர் அதிகாரிகளின் நெருக்குதல் காரணமாகத் தற்கொலை செய்துகொண்டார்.
இந்நிலையில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி சண்டிகருக்குச் சென்று பூரண் குமார் குடும்பத்தினரைச் சந்தித்து அவர்களுகு ஆறுதல் தெரிவித்தார்.
அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல்காந்தி, பூரண்குமார் தற்கொலை குறித்துச் சுதந்திரமான மற்றும் நேர்மையான விசாரணை நடத்தப்படும் என்று அரியானா முதலமைச்சர் நயாப் சிங் சைனி உறுதியளித்ததாகக் குறிப்பிட்டார்.
மூன்றுநாட்கள் ஆகியும் அதற்கான நடவடிக்கை தொடங்கவில்லை என்றும், தந்தையை இழந்த மகள்கள் இருவரும் மிகுந்த மன அழுத்தத்தில் உள்ளதாகவும் ராகுல் தெரிவித்தார்.
பூரண்குமாருடன் பணியாற்றிய பிற அதிகாரிகள் அவரிடம் தொடர்ந்து பாகுபாடு காட்டியதும், அவரை அவமதித்ததுமே அவர் தற்கொலைக்குக் காரணம் எனச் சுட்டிக்காட்டினார். நாடெங்கும் தலித் சகோதர சகோதரிகளுக்கு இவ்வாறான தீங்கிழைக்கப்படுவதாகவும் ராகுல்காந்தி குற்றஞ்சாட்டினார்.


