வாகனம் மீது மின் கம்பி உரசி யாத்ரீகர்கள் 6 பேர் பலி ! உத்தர பிரதேசத்தில் சோகம்!

மீரட் : உத்தர பிரதேசத்தில் கன்வாரி யாத்ரீகர்கள் சென்ற வாகனம் மீது, மின் கம்பி உரசி விபத்துக்குள்ளானதில், ஆறு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.வட மாநிலங்களில் சிவபெருமானை வழிபடும் சிவபக்தர்களை கன்வாரி என அழைப்பர்.இவர்கள், ஆண்டு தோறும் சாதுர்மாஸ்யம் எனப்படும் ஆடி மாதத்தில், சோமவார விரதம் இருந்து, ஹரித்துவார், கங்கோத்ரி போன்ற புனித தலங்களுக்கு யாத்திரை செல்வர்.

அங்கிருந்து கங்கை நீரை சேகரித்து, அதை தங்கள் ஊரில் உள்ள சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்வது வழக்கம்.இவ்வாறு, உத்தர பிரதேசத்தில் ராலி சவுஹானைச் சேர்ந்த கன்வாரி யாத்ரீகர்கள் சிலர், ஹரித்துவாருக்கு புனித பயணம் மேற்கொண்டனர்.

அங்கு கங்கை நீரை சேகரித்த அவர்கள், ஒரு வாகனத்தில் தங்கள் சொந்த ஊருக்கு நேற்று முன் தினம் திரும்பினர். அப்போது மீரட் மாவட்டத்தின் பவன்பூர் கிராமத்திற்கு வந்தபோது, அப்பகுதியில் தாழ்வாக சென்ற மின் கம்பியில் இவர்கள் சென்ற வாகனம் உரசியது.

இதில் வாகனத்தின் மீது உயரழுத்த மின்சாரம் பாய்ந்ததில், 10 பேர் மயங்கி விழுந்தனர். தகவலறிந்த உள்ளூர் மக்கள், உடனே போலீசாருக்கும், மின் துறைக்கும் தகவல்தெரிவித்ததையடுத்து, உடனடியாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது.சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், வாகனத்தில் இருந்த யாத்ரீகர்களை மீட்டு, அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு அவர்களை பரிசோதித்த டாக்டர்கள், ஐந்து யாத்ரீகர்கள் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். பின், மேலும் ஒருவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.இச்சம்பவம் குறித்து மாஜிஸ்திரேட் விசாரணைக்கு மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *