
லக்னோ:
திருமண விழாவில் உணவு பரிமாறக் காலதாமதம் ஆனதால் மாப்பிள்ளை ஒருவர் நிச்சயம் செய்த பெண்ணைக் கரம்பிடிக்க மறுத்ததோடு, அதேநாளில் இன்னொரு பெண்ணைத் திருமணம் செய்த சம்பவம் நடந்துள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் சாண்டலி மாவட்டம் ஹமித்பூர் கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண்ணுக்கும், பக்கத்து ஊரைச் சேர்ந்த மெக்தாப் என்ற இளைஞருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. அப்போது திருமணத்தைப் பெண்ணின் வீட்டில் வைத்து நடத்த முடிவு செய்யப்பட்டது.
இருவீட்டாரும் பத்திரிகைகள் அச்சடித்து உறவினர்களுக்கு வழங்கினர். இருவரின் வீட்டிலும் திருமண விழா களைகட்டியது. இதையடுத்து திருமண விழாவுக்காக மாப்பிள்ளை மெக்தாப் தனது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் பெண்ணின் வீடு அமைந்துள்ள ஹமித்பூர் கிராமத்துக்கு வந்தார்.
அங்கு விருந்து பரிமாறப்பட்டது. பெண்ணின் வீட்டார் சார்பில் மாப்பிள்ளை வீட்டுக்கு உணவுகள் வழங்கப்பட்டன. அப்போது திடீரென்று வீட்டில் உணவு பற்றாக்குறை ஏற்பட்டது. இதையடுத்து பெண்ணின் வீட்டார் சிறிது நேரம் காத்திருங்கள். உணவு தயாரித்து வழங்குவதாகக் கூறினர். ஆனால் மாப்பிள்ளை வீட்டார் கேட்கவில்லை. உணவு பரிமாறக் காலதாமதம் ஆகிறது என்று பெண் வீட்டாரிடம் தகராறில் ஈடுபட்டனர்.
இந்தத் தகராறு முற்றவே திருமணத்தை நிறுத்துவதாக மாப்பிள்ளை மெக்தாப்பின் குடும்பத்தினர் கூறினர். அதோடு மணப்பெண்ணின் வீட்டிலிருந்து அவர்கள் புறப்பட்டுச் சென்றனர். அதுமட்டுமின்றி அன்றைய தினம் இரவே உறவுக்கார பெண்ணை மெக்தாப் திருமணம் செய்தார். இதனால் மணப்பெண் மற்றும் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.
இதுதொடர்பாகப் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் சார்பில் போலீசில் புகார் செய்யப்பட்டது. திருமணத்துக்காக மெக்தாப் மற்றும் அவரது குடும்பத்தினர் ரூ.1.60 லட்சத்தை வரதட்சணையாகப் பெற்றதாகக் கூறினர். இதையடுத்து போலீசார் மெக்தாப்பின் குடும்பத்தினரை அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதன்பிறகு மெக்தாப்பின் குடும்பத்தினர் ரூ.1.60 லட்சத்தைப் புகாரளித்த மணப்பெண்ணின் குடும்பத்தினரிடம் வழங்கினர். அதன்பிறகு அவர்கள் புகாரை வாபஸ் பெறுவதாக அறிவித்தனர். அதன்பிறக இருதரப்பினரும் இனி பிரச்சனை செய்யமாட்டோம் என்று எழுதி வாங்கி போலீசார் அனுப்பி வைத்தனர்.

