Mano Thangaraj: கியாஸ், பெட்ரோல், விலையை உயர்த்தி மக்களை வஞ்சித்தது மோடி அரசு!

Advertisements

தூத்துக்குடி விமான நிலையத்தில் இன்று பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவரிடம் தி.மு.க. சட்டமன்ற தேர்தல் அறிக்கை போலவே பாராளுமன்ற தேர்தல் அறிக்கையும் உள்ளதாக பாரதிய ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை கூறியது பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் அளித்து அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியதாவது:-

அண்ணாமலைக்கு சட்டமன்ற தேர்தல் என்றால் என்ன?, பாராளுமன்ற தேர்தல் என்றால் என்னவென்று தெரியாது. அவர் சட்டமன்றத்திற்கும், பாராளுமன்றத்திற்கும் சென்றவர் அல்ல. எந்த நடவடிக்கையையும் கவனித்தவரும் அல்ல.

10 ஆண்டு காலம் கியாஸ், பெட்ரோல் விலையை உயர்த்தி இந்திய நாட்டில் உள்ள மக்கள் அத்தனை பேரையும் வஞ்சித்தது மோடி அரசு.

தற்போது இந்தியா கூட்டணியில் பெட்ரோல் விலை நேர் பாதியாக குறைப்போம் என்று சொல்லி இருக்கின்றோம். கியாஸ் விலை 500 ரூபாய்க்கு கொண்டு வரப்படும் என தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் இருப்பது போன்று உரிமைத் தொகை இந்தியா முழுவதும் உள்ள குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை வழங்கப்படும். இந்த அற்புதமான திட்டங்களை எல்லாம் பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குறுதியாக அளித்துள்ளோம்.

இது கூட தெரியாமல் ஒருவர் கட்சி நடத்துகிறாரா? இல்லை எப்போதுமே பேசவேண்டும் என்பதற்காக பொய்யை புழுகி விட்டுக் கொண்டிருக்கிறார்களா? என்பதே எங்களுடைய கேள்வி.

தி.மு.க. அரசு மக்கள் மத்தியில் பலமாக ஊடுருவி உள்ளது. சட்டமன்ற தேர்தல் வாக்குறுதிகளை முதலமைச்சர் நிறைவேற்றி வருகிறார். 75 சதவீதத்திற்கு மேல் வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டோம். இன்னும் சில திட்டங்கள், பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

தமிழ்நாட்டில் சில கட்சிகள் வெற்றி வாய்ப்பு வேட்பாளர்களுக்கு தடுமாறிக் கொண்டிருக்கின்ற நேரத்தில் தி.மு.க. வெற்றி வேட்பாளர், வெற்றி கூட்டணி அமைத்து தி.மு.க. பிரசாரத்தை ஆரம்பித்து இருக்கின்றார்.

இது மகத்தான கூட்டணி. 40 என்ற மந்திரத்தை நிதர்சனத்தில் உருவாக்கும் என்ற ஒரு தேர்தலாக தான் இந்த தேர்தல் 100 சதவீதம் இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *