பெட்ரோல் வெடிகுண்டுகளுடன் சிக்கிய வாலிபர் கைது!

Advertisements

கோவை:

கோவை செல்வபுரம் பகுதியில் நேற்றிரவு செல்வபுரம் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரர்களாகப் பணியாற்றி வரும் செல்வகுமார் மற்றும் பிரசாந்த் ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

நள்ளிரவு 12.30 மணியளவில் அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வாலிபர் ஒருவர் வந்தார். போலீசார் நிற்பதை பார்த்ததும், வாலிபர் அங்கிருந்து வாகனத்தைத் திருப்பிச் செல்ல முயன்றார்.

இதைப் பார்த்ததும் போலீஸ்காரர்கள் 2 பேரும் ஓடிச் சென்று, அந்த வாலிபரை மடக்கிபிடித்தனர். பின்னர் இந்த நேரத்தில் எங்குச் செல்கிறீர்கள்.

எங்களைப் பார்த்ததும் ஏன் வாகனத்தைத் திருப்பினீர்கள் எனக் கேட்டு விசாரித்தனர். அவர் பதில் சொல்லாமல் அமைதியாகவே இருந்தார்.

இதையடுத்து போலீஸ்காரர்கள், அந்த வாலிபரின் மோட்டார் சைக்கிளைச் சோதனை செய்தனர்.

அப்போது அதில், 2 பெட்ரோல் வெடிகுண்டுகள் இருந்தது. இதைப் பார்த்ததும் அதிர்ச்சியான போலீசார், அந்த வாலிபரிடம் இது தொடர்பாக விசாரித்தனர்.

ஆனால் அவர் போலீசாரிடம் முன்னுக்குப் பின் முரணாகவே பதில் அளித்தார்.

இதையடுத்து போலீசார், அவரைப் போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர். விசாரணையில், அவர் சுந்தராபுரம் அடுத்த மைல்கல் பகுதியைச் சேர்ந்த நாசர் என்பது தெரியவந்தது.

இவர் தெலுங்கு பாளையம் பிரிவு ரோட்டில், அலுவலகம் நடத்தி வரும் பா.ஜ.கப்பிரமுகரான மணிகண்டன் என்பவரிடம் கடந்த சில மாதங்களாக வேலை பார்த்து வந்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு, மணிகண்டனிடம், நாசர் கடனாக ரூ.5 ஆயிரம் பணம் கேட்டுள்ளார். ஆனால் மணிகண்டன் பணம் கொடுக்க மறுத்து விட்டாரெனக் கூறப்படுகிறது.

இதனால் மணிகண்டன் மீது ஆத்திரம் அடைந்த அவர், அவரைப் பழிவாங்கத் திட்டமிட்டுள்ளார்.

நேற்றிரவு, கரும்புக்கடை ஆசாத் நகரில் தனது நண்பர்கள் 3 பேருடன் சேர்ந்து நாசர் மது அருந்தியதும், போதை தலைக்கேறிய நிலையில் இருந்த அவர், மணிகண்டனை பழிவாங்க அவரது அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசத் திட்டமிட்டு, பெட்ரோல் வெடிகுண்டுகளுடன் வந்தபோது போலீஸ் சோதனையில் சிக்கியதும் தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் அவரைக் கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். அவரிடமிருந்து பெட்ரோல் வெடிகுண்டுகள், மோட்டார் சைக்கிளைப் பறிமுதல் செய்தனர்.

கைதான நாசர் மீது, இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீசிய வழக்கு, கரும்புக்கடை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட சிறப்பு சப்-இன்ஸ்பெக்டரிடம் தகராறு செய்த வழக்கு, விஸ்வரூபம் படம் வெளியானபோது குனியமுத்தூரில் உள்ள ஒரு தியேட்டரில் பெட்ரோல் வெடிகுண்டு வீசிய வழக்கு உள்பட 5 வழக்குகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *