
யானையை வளர்க்க தேவையான வசதிகள் இல்லாததால் கடைய நல்லூர் பகுதியில் மக்தூம் ஞானியார் தர்காவில் உள்ள பெண் யானையைப் வனத்துறையினர் பறிமுதல் செய்து திருச்சியில் உள்ள யானைகள் முகாமிற்கு கொண்டு சென்றனர்.
கடையநல்லூர்: மதுரை-தென்காசி தேசிய நெடுஞ்சாலையில் கடைய நல்லூர் பகுதியில் மக்தூம் ஞானியார் தர்கா உள்ளது.இந்தத் தர்காவில் நூறாண்டுகளுக்கு மேலாகப் பள்ளிவாசலுக்கென்று சொந்தமாக யானை வாங்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.
அதன்படி கடந்த 28 ஆண்டுகளுக்கு முன்பு வாங்கப்பட்ட பெண் யானை ஒன்று இந்தத் தர்காவினரால் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த யானையை வளர்க்க சில ஆண்டுகளாக வனத்துறையிடம் முறையான அனுமதி பெறாமல் தர்காவினர் வளர்த்து வந்ததால், வனத்துறை தெரிவித்த தகவலின் பேரில், சென்னையிலிருந்து யானை பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு கமிட்டியினர் ஒரு குழுவாகக் கடையநல்லூர் வந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு யானையைப் பார்வையிட்டனர்.
இந்நிலையில் யானையை வளர்க்க தோட்டம், நீச்சல் குளம், தூங்குவதற்கு தேவையான வசதிகள் உள்ளிட்டவை தர்காவில் இல்லை என்று கூறி உடனடியாக இந்த யானையைப் பறிமுதல் செய்து திருச்சியில் உள்ள யானைகள் முகாமிற்கு கொண்டு செல்ல அந்தக் குழு உத்தரவு பிறப்பித்தது.
அதனைத்தொடர்ந்து நேற்று இரவு கடையநல்லூர் ரேஞ்சர் சுரேஷ்குமார் தலைமையிலான வனத்துறையினர் யானையை மீட்டு திருச்சியில் உள்ள முகாமிற்கு ஏற்றி அனுப்பி வைத்தனர்.
தற்போது 58 வயது கொண்ட இந்தப் பெண் யானையின் எடை 4.5 டன் ஆகும். இந்தத் தர்காவிற்கு இது 5-வது யானையாகும். நூற்றாண்டு பழமையான இந்தத் தர்காவிலிருந்து யானையை வனத்துறையினர் கைப்பற்றிச் சென்றது அங்குள்ளவர்களுக்கு வேதனையை ஏற்படுத்தியது.
இதனால் பொதுமக்கள் அங்குத் திரண்டு வந்து யானையுடன் செல்பி எடுத்துக் கொண்டனர். அதேநேரத்தில் யானை பாகன் நத்கர் பாதுஷா, யானையின் பிரிவைத் தாங்க முடியாமல் கண்ணீர் விட்டு அழுதபடி யானைக்குப் பிரியா விடை கொடுத்தார்.



