பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை 44 மின்சார ரெயில் சேவைகள் ரத்துசெய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை: சென்னை சென்டிரல்-அரக்கோணம் வழித்தடத்தில் பேசின்பிரிட்ஜ்-வியாசர்பாடி ஜீவா ரெயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாள பராமரிப்பு பணி நடைபெற இருப்பதால் இன்று (சனிக்கிழமை) இரவு 11.30 மணி முதல் நாளைக் காலை 6.30 மணிவரையில் 14 மின்சார ரெயில் சேவையை ரத்து செய்து தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
அதன்படி, மூர்மார்க்கெட்டிலிருந்து இன்று இரவு 10.35 மணிக்குப் பட்டாபிராம் புறப்படும் ரெயில், மூர்மார்க்கெட்டிலிருந்து இரவு 11.30, 11.45 மணிக்கு ஆவடி செல்லும் ரெயில், பட்டாபிராம் மிலிட்டரி சைடிங்கிலிருந்து ஆவடிக்கு இரவு 11.55 மணிக்குப் புறப்படும் ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது.
மூர்மார்க்கெட்டிலிருந்து நாளைக் காலை 4.15 மணிக்குப் பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் செல்லும் ரெயில், மூர்மார்க்கெட்டிலிருந்து திருவள்ளூருக்கு காலை 4.30 மணிக்குப் புறப்படும் ரெயில், மூர்மார்க்கெட்டிலிருந்து அரக்கோணத்துக்கு 5.30 மணிக்குப் புறப்படும் ரெயில், மூர்மார்க்கெட்டிலிருந்து திருவள்ளூருக்கு 5.40 மணிக்குப் புறப்படும் ரெயில்களும் ரத்து செய்யப்படுகிறது.
சென்னை எழும்பூர் – விழுப்புரம் வழித்தடத்தில் கோடம்பாக்கம் – தாம்பரம் இடையே காலை 11 மணி முதல் மதியம் 3.15 மணிவரை தண்டவாள பராமரிப்பு பணி நடைபெற இருப்பதால் 44 மின்சார ரெயில்களின் சேவை நாளை (ஞாயிற்றுக்கிழமை) ரத்து செய்யப்படுகிறது.அதன்படி, சென்னை கடற்கரை – தாம்பரம் இடையிலான மின்சார ரெயில் சேவை காலை 10.30 மணி முதல் மதியம் 2.30 மணி வரையும், தாம்பரம்-கடற்கரை இடையிலான சேவை காலை 10.05 மணி முதல் மதியம் 3.30 மணி வரையும், செங்கல்பட்டு-கடற்கரை இடையிலான ரெயில் சேவை காலை 9.40 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
பயணிகளின் வசதிக்காக, தாம்பரம் – செங்கல்பட்டு இடையே காலை 11 மணி, 11.50, மதியம் 12.30, 12.50, 1 மணி, 1.45, 2.15 ஆகிய நேரங்களில் மட்டும் சிறப்பு ரெயில் சேவை இயக்கப்படும். மறு மார்க்கமாகக் காலை 9.40, 10.20, 10.55, 11.30, மதியம் 12 மணி, 12.20, 1 மணி ஆகிய நேரங்களில் சிறப்பு ரெயில் சேவை இயக்கப்படும் எனத் தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.”,

